கொள்ளை அடிக்கவும், முறைகேடுகளில் ஈடுபடவுமே உருவாக்கப்பட்ட அயோக்கியத் துறை என்று அறநிலையத் துறையை விமர்சிக்கிறார்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள். இந்நிலையில், இன்று அவர்கள் அறிவித்த உள்ளிருப்பு வேலை நிறுத்தம் குறித்து பலத்த கண்டனங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
இறைவனை வழிபடும் கோயில்களை அரசு அலுவலகங்கள் ஆக்கி வைத்த அறநிலையத்துறைக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் என்று இன்று முதல் அறிவித்திருக்கிறார்கள். அறநிலைய துறையில் இவர்கள் வைக்கும் கோரிக்கைகள்…
* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கவும்
* உச்சநீதிமன்ற உத்தரவின்படி பணிக்கொடை வழங்கவும்
* காலி பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யவும்
* ஊதிய முரண்பாடுகளை அகற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவும்
* ரூபாய் 50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு முதல்நிலை திருக்கோயில் பணியாளர்களுக்கான ஊதியம் வழங்கவும்
* மற்றும் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக 25 6 2018 அன்று மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தபடி எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாததால்
கோரிக்கைகள் நிறைவேறும் வரை 23 1 2019 இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து திருக்கோயில்களிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரும் அறநிலையத் துறை அமைச்சரும் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், திருக்கோயில் பணியாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் பக்தர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஓசிச் சோறு … திருடர்கள்… கொள்ளையர்கள்… சிலைத் திருடர்கள்… லஞ்சத்தில் திளைப்பவர்கள் என்றெல்லாம் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.