பிராமண சமுதாயத்தை கொச்சை படுத்தும் A1 திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் முதல்வருக்கு அளித்துள்ள கடிதத்தில்,
A 1 திரைப்ப காட்சிகளை நீக்க கோருதல் மற்றும் நடிகர் சந்தானம், இயக்குனர் ஜான்சன் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கோருதல் – தொடர்பாக வழங்கும் புகார்…
தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து இந்து தெய்வங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. தணிக்கைத் துறையும் இதையெல்லாம் கண்டுகொள்ளாதது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் கூட யோகி பாபு என்ற நகைச்சுவை நடிகர் நடித்த திரைப்படம் மிக மோசமான வகையிலே இந்து கடவுள்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது ஜான்சன் என்பவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து வரும் 27ஆம் தேதி திரையிடப்பட உள்ள ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் 1) என்ற திரைப்படத்தில் பிராமணர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும், பிராமண பெண்களையும் மிக மோசமான வகையில் சித்தரித்துள்ளனர்.
சிறிய எண்ணிக்கையில் தமிழகத்தில் வசிக்கக்கூடிய பிராமண சமுதாயத்தினரை தொடர்ந்து அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும், மற்றும் போலி போராளிகளும் சீண்டி வருகின்றனர்.
இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணத்தை, வரலாற்றினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆகவே , தமிழக முதல்வர் அவர்கள் இது விஷயத்தில் தலையிட்டு இத்திரைப்படத்தில் அப்பாவி பிராமணர்களது வாழ்க்கை முறையை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க உத்தரவிடுவதோடு, நடிகர் சந்தானம், இயக்குனர் ஜான்சன் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது .