spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்வரதனின் விருப்பம் | Sri #APNSwami #Trending

வரதனின் விருப்பம் | Sri #APNSwami #Trending

- Advertisement -

வரதனின் விருப்பம்

(By Sri APNSwami)

Varadan Athivaradan.jpg

வரதனின் விருப்பம்

முழுநிலவாகப் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசிப்படர்ந்திருந்தான். அப்பொழுதுதான் மழைபொழிந்து ஓய்ந்திருந்ததால் மேகங்கள் நிலவை மறைக்காமல் நகர்ந்திருந்தன.  மேகத்திரள்களின் நடுவே ஆங்காங்கு நட்சத்திரங்களும் கண்சிமிட்டின.  இன்னும் சற்றுநேரத்தில் சந்திர க்ரகணம் சம்பவிக்கப் போகிறதாகையால், இனம் தெரியாத நிசப்தம் எங்கும் குடிகொண்டிருந்தது.  வான்தூறல்கள் விழுந்ததால் வெப்பம் தணிந்து சில்லென்று மெல்லிய காற்று மேனியை வருடியது.  ஆளரவமற்ற திருக்கோயில் வளாகம்.  அத்திவரதரை சேவிக்க வந்த கட்டுக்கடங்காத கூட்டம் கலைந்து சென்றுவிட்டது.   இனி அடுத்த நாள் அதிகாலை தான் தரிசனம் என்பதால் திருக்கோயில் வளாகம் அமைதியாகயிருந்தது.  ஏறத்தாழ நள்ளிரவுப்பொழுது நெருங்கும் சமயம்.  கடமையாற்றிய காவலர்களும் களைப்பின் மிகுதியால் கண்ணயர்ந்துள்ளனர்.  அனந்தசரஸ் புஷ்கரிணியைச் சுற்றிலும் பாதுகாப்புகள் உள்ளதால் எவரும் உள்ளே நுழைய முடியாது.  ஆனால் இதையெல்லாம் தாண்டி யாரும் அறியாவண்ணம் ஒரு நெடிய கருத்த உருவம் குளத்தின் படிகளில் அமர்ந்திருந்தது.

முகிலுருவமாக திருவுருவம் இருந்தாலும் கும்மிருட்டிலும் சோதிவடிவமாகக் காட்சியளித்தது.  குளத்தில் எதிரே தெரியும் அத்திவரதர் கோபுரத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த அவ்வுருவம் அவ்வப்பொழுது தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தது.  மெலிதாக தலையை இடதும் வலதுமாக ஆட்டுவதும், கைகளை பிசைவதும், ஆகாயத்தை அண்ணார்ந்து பார்ப்பதுமாக ஏதோ தீவிரசிந்தையில் ஆழ்ந்துள்ளது தெரிகிறது.  நிலவின் ஒளியில் அவ்வுருவத்தை நெருங்கிப்பார்த்தால் ” இவரை எங்கோ பார்த்த மாதிரியுள்ளதே;  யார் இவர்?” என யோசிப்பதற்குள்…

“ஆஹா! புரிந்தது.  இவர் அத்திவரதர்.  வசந்தமண்டபத்தில் இருந்து எப்படி வந்தார்?  என்ன யோசனை செய்கிறார்?”  என்று நாம் நினைத்துகொண்டிருக்கும் போது  யாரோவரும் காலடி ஓசை கேட்கிறது. சட்டென்று நாம் குளத்தின் சுற்றுச்சுவர் நிழலில் ஒதுங்கி மறைந்துக்கொள்கிறோம்.  நடப்பவற்றை அங்கிருந்து வசதியாக கவனிக்கவும்  முடியும்.

காலடி ஓசை வரவர சற்றே பெரிதாகிறது.  அத்தி வரதனை இரண்டு நெடிய உருவங்கள் நெருங்குகின்றன.   “இவ..…ர்…..கள்,…..இவ…ர்…..கள்….” நமது யோசனை தடுமாறுகிறது.  உண்மையிலேயே கண்களை நம்பமுடியவில்லை. குளத்தின் படிகளில் அமர்ந்திருக்கும் அத்திவரதரை நெருங்குபவர்கள் சாக்ஷாத் உற்சவர் வரதனும், மலைமேல் நிற்கும் மூலவரும்தான்.  இதென்ன அதிசயம்!

athi varadhar “நாம் காண்பது கனவா, நினைவா?  புரியவில்லை. மூன்று நிலைகளாக வரதன் நம்முன்னே நிற்கிறானா ? “, வரதா!  வரதா! என்று எண்ணுவதற்குள் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

உற்சவர் வரதன் மெதுவாக “அத்திவரதா!” என அழைத்தான்.

முழுதும் சிந்தனையில் முழுகிக்கிடந்த அத்திவரதன், வரதனின் வார்த்தைகளை காதுகளில் வாங்கிகொள்ளவில்லை.

“அத்திவரதா!….அத்திவரதா” சற்றே மீண்டும் பலமாக அழைத்தபின் “என்ன!” என திடுக்கிட்டுத் திரும்பினான் அத்திவரதன்.

நெருங்கிய வரதன் அத்திவரதனின் இடதுகையினைப் பிடித்தபடியே “என்ன சிந்தனை!” என்று வினவினான்.

    “வரதா! மறுபடியும் குளத்திற்குள் போய்விடமாட்டோமோ?  எதற்காக வெளியே வந்தோம்?  எனும் எண்ணம் தோன்றுகிறது” – அத்திவரதன்.

kanchi varadhar(உற்சவரும் மூலவரும் திடுக்கிட்டு) “என்ன? அதற்குள்ளாக மறுபடியும்  ஜலாதிவாசமா?”

“ம்….ம்..” அத்திவரதன்

“ஏன்? என்ன ஆயிற்று?  நாற்பத்தியெட்டுநாட்கள் முடிவதற்குள் குளத்துக்குள் எழுந்தருள என்ன அவசரம் ?” மூலவர்.

“ப் ச் “என சலித்துக்கொண்ட அத்திவரதன் “நான்கூட மிகுந்த உத்ஸாஹத்துடன்தான் உள்ளிருந்து வெளியேவந்தேன்.  குளத்தினுள் சேற்றில் அமிழ்ந்துகிடந்த என்னைக்கண்டதும் கைங்கர்யபரர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் ” அத்திவரதா…. அத்திவரதா” என கோஷமிட்டதும் உள்ளம் நெகிழ்ந்தேன். நாற்பதாண்டுகள் கழிந்து இப்புதிய உலகைக் காணப் போகிறோமே எனும் உத்ஸாகம் எனக்குள்ளும் ஊற்றெடுத்தது.  இங்கு நடப்பது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.  ஹ்ம்ம்… உங்களுக்கு என்ன?  நீங்கள் எப்போதுமே வெளியே இருந்து உத்சவம் கண்டருளுபவர்கள்  – அத்திவரதன்.

“அஃதென்ன சொல்கிறாய் அத்திவரதா?  நாங்கள் இருவரும் (மூலவரும், உற்சவரும்) எப்போதும் வெளியே இருக்கிறோம்.  அதனால் என்ன? அதற்கும் உனது வருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? – உற்சவர் வரதன்.

” உற்சவரான நீயோ பிரமனின் அயமேத வேள்வியில் தோன்றியவன்.  உனது உத்சவமோ:  அது ஒரு தனி ஸ்டைல்.  எந்த பெருமாளுக்கும் இப்படி உத்சவம் கிடையாது.  எங்க தலைவர் ஸ்டைல் தனி தான்” என்று எப்போதும் உன்னை பின்தொடரும் ரசிகர் பட்டாளம்.  பிரம்மோற்சவம்  ஆரம்பித்தால் போதும் இங்குள்ளவர்களுக்கு தலைகால் புரியவில்லை மற்றும் பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ  ஓடி ஓடி வருகிறார்கள்.

“அதெல்லாம் இருக்கட்டும் அத்திவரதா நீ என்னதான் சொல்ல வருகிறாய்?”

“இதோ இந்த மூலவர் இருக்கிறாரே!  என்ன அழகு!  என்ன கம்பீரம்! உத்சவருக்கு ஈடுகொடுக்கும் திருமேனி.  அவ்வப்போது திருமஞ்சனம், புஷ்ப அங்கி”, என தினந்தோறும் கொண்டாட்டம் தான்.

அதற்குள் மூலவர்குறுக்கிட்டு “ஓய்! அத்திவரதரே! என் விஷயத்தை முழுதும் அறியாமல் பேசுகிறீர்.  உற்சவர் மலையிலிருந்து இறங்கிவிட்டால் மூலவரை சேவிக்கக்கூடாது!  என ஊர்கட்டுப்பாடு உண்டு.  வெளியூர் சேவார்த்திகள் வந்தால், அவர்கள் பஸ்சிலிருந்து இறங்கும் போதே “பல்லி தரிசனம்” தேடுகிறார்கள்.  பல்லியா! பகவானா என்றால் பல்லிதான் அவர்களின் சாய்ஸ். ஆலயத்திற்கு வருமானமே பல்லிதான் தெரியுமா!”

“இன்னொன்றையும் சொல்கிறேன் கேள் ” – மூலவர்

“மூலவரே மூச்சு விடாமல் பேசினீரே! அந்த இன்னொன்று என்ன! அதையும் சொல்லும்” – அத்திவரதன்.

   “உற்சவரோ யாகத்தில் தோன்றியவர்.  அத்திவரதன் நீயோ ஆதி மூலவர். ஆழ்வார், ஆசார்யர்கள் உன்னை சேவித்ததுதான் பாடினார்கள்.  அதனால் நீ தான் மேன்மையானவன்.   நானோ! பழையசீவரத்திலிருந்து புதியதாக வந்தேனாம்.  என்ன இருந்தாலும் ஆதிவரதர் ஆதிவரதர் தான்.  இவர் பாதியில் வந்த வரதர்” என என் காதுபடவே பேசுகின்றனர்.  உண்மையில் நான் தான் குளத்தினுள் அமிழவேண்டும் – மூலவர்

“மூலவரே! நமது குறைகள் இருக்கட்டும்.  அத்திவரதர் எதனால் இப்படி துக்கப்படுகிறார்?  எனும் கேள்விக்கு இதுவரை விடையில்லையே?” உற்சவர் வரதன்.

“வரதா! நான் என்னத்தைச் சொல்ல!  ஏதோ சில காரணங்களால் என்னை குளத்தில் எழுந்தருள பண்ணினார்கள்.  அதன் பின்னர் நான் வெளியே தெரிந்தேன்.  இதனால் நாற்பதாண்டுகள் எனும் கணக்குமுறை வைத்து வெளியே தரிசனம் செய்யவைத்தனர்.  இரண்டொருமுறை நாற்பதாண்டுகள் கணக்கு முன்பின் மாறியுள்ளது. சரிதானே!!” – அத்திவரதர்.

“ஆமாம் சரிதான். அதற்கென்ன இப்போது ?” – இருவரும்.

Athevaratharஆழ்வார்களும், ஆசார்யர்களும் தரிசித்த, பாடிய, என்னை சேவிப்பது பக்தர்களுக்கு பாக்யம்தான்.  ஆனால் என் பெயரைச்சொல்லி என்னென்னவோ நடக்கிறது.  ஒரு புறம் ஜோஸ்யகாரர்கள், கடக ராசிக்கு கன்னத்தை சேவியுங்கள், மகர ராசிக்கு மூக்கை சேவியுங்கள், தனுர் ராசிக்கு தாமரைக்கண்களை சேவியுங்கள் என்று எனது அவயவங்களை பன்னிரெண்டு ராசிகளுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டனர்.  போதாக்குறைக்கு விஐபிக்கள் எனும் பேரில் நாஸ்தீகர்களின் கும்பல் வேறு.

“அத்திவரதா! நீ யாரைச் சொல்கிறாய்?”- உற்சவர்.

” நான் யாரையும் குறிப்பிட்டுச்சொல்லவில்லை.  நாக்கில் நாத்திகத்தை சுமந்துகொண்டு, மனதில் பக்தி பூண்டு, மக்களை ஏமாற்றும் கும்பலை பொதுவாகத்தான் சொன்னேன்.  நெஞ்சுநிறைய அழுக்குடன் வந்து என்முன்னே நின்று நகைக்கும் போது அவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை.  அதே சமயம் வரிசையில் வரும் பக்தர்களை கண்டால் சற்று ஆத்திரமாகவும் உள்ளது.

“பொதுமக்கள் என்ன செய்தார்கள் பாவம்? கால்கடுக்க க்யூவில் நின்றுதானே வருகின்றனர்” – மூலவர்.

“ஆமாம், ஆமாம், நாத்திகரையும், தெய்வநிந்தனை செய்பவரையும், இந்து மதத்தை படுகேவலமாகப் பேசுபவர்களையும் தூக்கிவைத்து கொண்டாடிவிட்டு இப்போது கூட்டத்தில் என்னை தரிசிக்க திண்டாடுகிறார்களாம்.  திண்டாடட்டும் திண்டாடட்டும்.”

வேகமாக பேசியதில் சற்றே மூச்சிறைத்தது அத்திவரதனுக்கு.  அவன் தன்னை ஆச்வாஸம் செய்துகொள்ளட்டும் என மற்ற இருவரும் அமைதி காத்தனர்.  சற்று மூச்சுவாங்கி இந்த மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள். தெய்வத்தை நிந்திப்பவர்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளில் மயங்குகிறார்கள், ஆனால்  தெய்வத்தின் வார்த்தைகளை நம்புவதில்லையே! – அத்திவரதன்

  “நான் கூட திருக்கச்சிநம்பிகள் மூலம் ராமானுஜருக்கு ஆறுவார்த்தைகள் சொன்னேன்.  நானே பரம் தத்வம் என்றும், சரணாகதிதான் மோட்சத்திற்கு வழியும் என்றேன்.  அதையெல்லாம் இப்போது யார் நினைத்துப்பார்க்கிறார்கள்” – உற்சவர் வரதர்.

“அதைத்தான் நானும் சொல்கிறேன்.  எதை முக்கியமாக கவனிக்க வேண்டும், எது தேவை;  என அறியாமல் திண்டாடும் கூட்டம் இது.   அதனால்தான் சில சுயநலவாதிகள் தங்களின் ஆளுமையில் இவர்களை வைத்துள்ளனர். “அத்திவரதர் இப்போது அரசியல் ப்ரமுகர்களுக்கும், திரைப்ரபலங்களுக்கும், முன்புறம் நாஸ்திகம் பேசி, முதுகுக்குப்பின்னே ஆஸ்தீக வேஷம் போடுபவர்களுக்கும் அனுக்ரகம் செய்கிறார்”;  எனும் பேச்சு என்னைக்குறித்து மக்கள் பேசவாரம்பித்துவிட்டனர்.   இது எனக்கு தேவையா?

மூலவர் சிரித்துக்கொண்டே “ப்ரபலமான தூர்தர்களையும் விவிஐபிக்களாக்கினார்களே! அத்திவரதரே அதை சொல்ல மறந்தீரே”

எரிச்சலுடன், “நான் ஏன் மறக்கிறேன்.  நன்றாக நினைவிருக்கிறது. மொத்தத்தில் என்னை தெய்வமாக பார்க்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒரு இயந்திரமாகக் காண்கின்றனர்.  என்னால் இதை ஏற்க முடியவில்லை.  அதனால் தான் உடனே மறுபடியும் குளத்தினுள்  செல்கிறேன் என்றேன்”.

“அத்திவரதா!  ஒரு மண்டலத்திற்கே உனக்கு இப்படியிருக்கிறதே!  என் மனக்குமுறல்களை நான் யாரிடம் கொட்டித்தீர்த்துகொள்வது.  பெரியோர்களே வர வர இக்காஞ்சியில் குறைந்து விட்டனர் ஒருவேளை யாராவது  ஒரு பெரியவர் இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பு கிடையாது.  உத்சவங்கள் நடை பெறுகின்றன.  உண்மையான பக்தர்கள் ச்ரத்தையுடன் கைங்கர்யமும் செய்கின்றனர், சேவிக்கின்றனர்.  ஆனாலும் ஏதோ குறைந்தது போல் இருக்கிறது.  என்ன மூலவரே நான் சொல்வது சரிதானே!” – உற்சவர் வரதன்.

Kanchipuram Athivarathar sevai8மூலவர் “சரிதான்” என மெலிதாக தலையசைத்தார்.

“அத்திவரதா! உனக்குத் தெரியாததா! இந்த மக்கள் இன்று நேற்றல்ல ஜென்மஜென்மத்திற்கும் விளம்பரம், கவர்ச்சி, பொய்யுரைகள், போலிமுகங்கள், இதற்கு அடிமைகள்.  நம்மை சேவித்த சந்தோஷத்தைவிட வரும் விஐபிக்கள், விவிஐபிக்கள் இவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துகறதுல ரொம்ப ரொம்ப ஆவலாக உள்ளனர்!

“அவ்வளவு ஏன்? என்னுடைய சித்ரா பௌர்ணமி நடவாபி உத்சவம் , சினிமாவில் வந்த நீருக்குள் பொம்மை பெருமாள், சேலம் பட்டை கோயில் அத்திமர பெருமாள் இதையெல்லாம் அத்திவரதர் என்று fake news பிரச்சாரம் தானே இவர்களுக்கு ஒரிஜினலாக தெரிகிறது.  இன்னொரு காமெடி அத்தி வரதா “உனக்கு முத்தங்கின்னு திருப்பதி கோவிந்தராஜன் முத்தங்கியை காண்பித்து ஆயிரம் like போடுகிறார்கள்”. ஒரு பக்தர் கைவண்ணத்தில் உருவான கிராப்ட் பெருமாள் போட்டோ போட்டு இதை ஏழுபேருக்கு அனுப்பினா ஏழு ஜென்மம் மோட்சம்னு சொல்றா! ஹாஹா…ஹா…….. – உற்சவர் சிரிக்கிறார்

” வரதன் சொல்றது சரிதான்.  நாற்பது வருடமா உள்ள இருக்கறதால இந்த உலகம் தெரியல. ஆண்டாளையும், கண்ணனையும் அவதூறு பேசினவர்கள் அருள் வேண்டி வருகிறார்கள்.   ஓட்டு வாங்கும் சமயத்தில் மக்களை நாடி வருவதைப்போல, இங்கு வருவது யாரை ஏமாற்றுவதற்கு?  இங்கு வருவதை மக்கள் புரிந்துக்கொள்ள மாட்டேனென்கிறார்களே!

“நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் சரி.  நான் வெளியே வந்து மக்களுக்கு தரிசனம் கொடுத்ததின் நோக்கம் தர்மம் வளரணும், ஆன்மிகம் செழிக்கணும். ஆடம்பரமும், பகட்டும் இல்லாத சாமானிய பக்தன் மனம் குளிரணும். குறிப்பா நாஸ்திகம் அழியணும்.”

“இல்……ல…..வ…..ர….தா”  என இடைமறித்தார் மூலவர்.

“மூலவரே! நம்மை வேண்டி வரும் பக்தர்களின் விருப்பத்தை நாம் நிறைவேற்றுவது போல, நமது பக்தர்கள்;  எனது இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் எனது அருள் அவர்களுக்கு முழுமையாகும்.”

“அது எப்படி?” – உற்சவர்

varatharajaperumal“இனிவரும் காலங்களிலாவது இந்துக்கள் ஒன்று கூடவேண்டும்.  ஏறுமாறாகப் பேசுபவர்கள் இனியும் வாய் திறக்க பயப்படும்படி பதிலடி கொடுக்க வேண்டும். இது போன்ற பக்திவெள்ளத்தை சாதகமாக்கிக்கொண்டு தர்மராஜ்யம் உண்டாக்கப்பாடுபடவேண்டும்.  தெய்வநிந்தனை செய்து வஞ்சனையுடன் கபடமாகப் பழகுகிறவர்களின் பணத்திற்கு மக்கள் மயங்கக்கூடாது.

“விஐபிக்கள் என்னை வந்து பார்ப்பதைப்பெருமையாக நினைத்து விளம்பரம் தேடிக்கொள்ளலாம்.  ஆனால் ஆறுமணிநேரம் வரிசையில் நின்றுவரும் கடைகோடி பக்தனைத்தான் நான் கடாட்சிக்கிறேன்.  அதே சமயம் அந்த பக்தன் இவர்களின் பகட்டை பார்த்து மயங்கக் கூடாது.  தர்மத்தை நிலைநாட்ட நான் தண்ணீரிலிருந்து அவதரித்ததை சாமானிய பக்தன் உணர வேண்டும்.  நான் மீண்டும் வெளியே வரும் நாற்பது ஆண்டுகளில் இந்து தர்மம் எங்கும் நிலைநின்று பொய்யானவர்கள் புறமுதுகிட்டிருக்கவேண்டும்”.

“அத்திவரதா! பக்தர்களின் விருப்பத்தை பூர்த்திசெய்யும் உனக்கும் ஒரு விருப்பமோ!  என ஆச்சர்யமாகவுள்ளது.  இருந்தாலும் உன்னுடைய இந்த திருஉள்ளத்தை யார் அறிவார்கள்?  மக்களுக்கு இது எப்படி தெரியும்?” – உற்சவர் வரதர்

“இதோ நாம் பேசுவதையெல்லாம் சுவற்றின் பின் மறைந்திருந்து கேட்கிறானே! அவன் மூலமாக உலகறியச்செய்யலாம்.   இந்த பேச்சுவார்த்தை அப்படியே மக்களுக்கு சென்று சேரட்டும். இனியாவது ஆஸ்திக உலகம் விழித்துக்  கொண்டு நாஸ்தீகர்களை கொண்டாடாமல் இருக்கட்டும். அதோ! மக்கள் நேற்றிரவு முதல் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.  இன்று புதிய பட்டாடையில் அவர்களுக்கு தரிசனம் தர வேண்டும்.  வாருங்கள் போகலாம்.”….

எத்தனையோ பிறவியில் செய்த பாக்கியத்தின் பயனாக எம்பெருமான்களின் உரையாடல் காதில் விழுந்தது.  இது அத்திவரதனின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஏக்கமும் கூட.  நம் சனாதன தர்மம் தழைத்திட இனியாவது சிந்தியுங்கள்.

அன்புடன்,

ஏபிஎன்.

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.com மேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe