வேர்க்கடலை பாகற்காய் சாம்பார்
தேவை:
பச்சை வேர்க்கடலை – 100 கிராம்,
பாகற்காய் – 100 கிராம், புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு, துவ பருப்பு (இரண்டும் சேர்த்து) – 100 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு.
செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, துவரம்பருப்பைக் குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வேகவைக்கவும். பாகற்காயை விதை நீக்கி துண்டுகளாக நறுக்கி வேகவைத்து நீரை வடிக்கவும்
ஒரு வாணலியில் புளியைக் கரைத்துவிட்டு உப்பு, சாம்பார் பொடி போட்டுக் கொதிக்கவிடவும். புளி நன்கு கொதித்ததும் இதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, பாகற்காய் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். பிறகு வேகவைத்த பருப்பையும் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பின்னர் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்.
குறிப்பு: சாம்பார் பொடிக்குப் பதிலாக மல்லி (தனியா), கடலைப்பருப்பு, தேங்காய், காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்துச் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.