கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பெண் பாரதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரிடம் வேலை வாங்கித் தருமாறு கூறி ரூ. 20 ஆயிரம் கொடுத்துள்ளார்.
ஆனால் மாதங்கள் பல கடந்தும் விஜயன் வேலை வாங்கித் தரவில்லை. பாரதி கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லையாம்! தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு விஜயனிடம் பாரதி பலமுறை கேட்டும் விஜயன் பணத்தை தரமுடியாது என்று மறுத்து விட்டாராம்.
இந்நிலையில் பாரதி தன் உறவினர் பிரபுவிடம் இது குறித்துக் கூறியுள்ளார். மேலும், பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருமாறு கூறியுள்ளார்
இதை அடுத்து, விஜயன் வீட்டுக்குச் சென்ற பிரபு, பாரதியின் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயன், பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
பலத்த காயமடைந்த பிரபு, சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்தச் சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.