கட்சியை விட்டு நீக்கி… என்னைக் கடனாளி ஆகாமல் காப்பாற்றிய வைகோவுக்கு நன்றி என்று கூறி, வைகோவை கிண்டல் செய்து ராமநாதபுரத்தில் போஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர் அரு. சுப்பிரமணியன். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கு வேலை பார்க்காமல் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றினார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இதை அடுத்து வைகோவின் உதவியாளர் அருணகிரி, சுப்பிரமணியனிடம் இது குறித்துக் கேட்டதற்கு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்டுகிறது.
இந்நிலையில், மதிமுக.,வில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த நீக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்து, அரு. சுப்பிரமணியன் அடித்து ஒட்டியிருக்கும் போஸ்டர்தான் ராமநாதபுரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.