திருச்செந்தூர்: கனிமொழி போட்டியிட்டு வென்ற தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு, எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்று, தற்போது தெலங்கானா மாநில ஆளுநர் ஆகியிருக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று வந்திருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு, ஆதித்தனார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். முன்னதாக இந்தத் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைச் சந்தித்தார் தமிழிசை. தொகுதியில் தேர்தல் அறிவிப்பு வந்ததும், தமிழிசையை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக.,வின் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆரத்தி தட்டில் பணம் போட்டும், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தும் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதை அடுத்து, கனிமொழியின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, வழக்கு தொடுத்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். இதனிடையே தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநர் ஆனதால், இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வார் என்று கூறப் பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.