என் மகனை சுட்டுக் கொல்லுங்கள் சார்!.. என்று ஆவேசக் குரல் எழுப்புகிறார், பிரியங்கா கொலை வழக்கில் நான்காவது குற்றவாளியான சென்ன கேசவலுவின் தாய்.
என் மகன் இப்படிச் செய்வான் என்று நினைக்கவே இல்லை. ஒரு பெண்ணை காதலித்து திருமணம் புரிந்து கொண்டான். நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது.
முன்பு நன்றாகத்தான் இருந்தான். அந்த முஸ்லிம் பையனுடன் சேர்ந்து திரிந்ததால் கெட்டுப் போய்விட்டான் என்று சொல்லி சென்ன கேசவலுவின் தாய் அழுது புலம்பினார்.
ஒரு கட்டத்தில் ஆவேசமான அவர், பிரியங்காவை எப்படிக் கொன்றார்களோ அதே போல் என் மகனையும் கொல்லுங்கள் என்றார். என் மகன் இதுபோல் கீழ்த்தரமான செயல் செய்ததால் என் கணவர் தற்கொலைக்கு முயன்றார். இப்போது ஊரெல்லாம் எங்களைப் பற்றியே பேசுகிறார்கள். அவனால் எங்களுக்கு பெருத்த அவமானம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆரிஃப், லாரி ரிப்பேராகி விட்டதென்று என் மகனை அழைத்துச் சென்றான். இப்போது ஊரெல்லாம் எங்களைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. அவனை தூக்கில் போட்டுக் கொல்லுங்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நான் மட்டுமா ஒன்பது மாசம் சுமந்து பெற்றேன்? பிரியங்காவின் அம்மாவும் தானே ஒன்பது மாசம் சுமந்து பெற்றாள்? என்று அந்தத் தாய் கூறியது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
அதே நேரம், முதல் குற்றவாளி என குற்றம் சாட்டப் பட்டுள்ள மொஹம்மது பாஷாவின் தாயார், அவன் தவறே செய்திருந்தாலும், அவனை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இதனையும் இன்று ஊடகங்களில் இரு தாய்மார்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லி விவாதிக்கிறார்கள்.