மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
மதுரை வந்த அனைவருக்கும் என் வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கிய மோடி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரத் துறையில் பெயர் பெற்று விளங்குகிறது. அதுபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1200 கோடிக்கும் அதிக மதிப்பில் உருவாகிறது என்று குறிப்பிட்ட மோடி,
அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் இது உருவாகிறது என்றார்.
பல் நோக்கு சிறப்பு மருத்துவமனைகளை மதுரை, தஞ்சை, நெல்லையில் துவக்கியது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, மாநில அரசு சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது என்றார். மேலும், தமிழக அரசின் சுகாதார முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணை புரியும் என்றார்.
ஞாயிற்றுக்கிழமை இன்று முற்பகல் 11:30க்கு மதுரை, மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அரசு மருத்துவ கல்லுாரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மதுரை, தஞ்சாவூர் மற்றும் நெல்லை மருத்துவக் கல்லுாரிகளில், 450 கோடி ரூபாயில், கட்டப்பட்ட பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவுகளையும், பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய கப்பல் துறை இணை அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் நடராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வரவேற்றார். முதல்வர் பழனிசாமி வாழ்த்தி பேசினார்.