காஷ்மீர் புலவாமா மாவட்டத்தில் இன்று நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்தனர். இதற்கு நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்துக் கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியுள்ளது; பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
आज पाकिस्तान स्थित और उनके द्वारा संरक्षित आतंकवादी संगठन जैश-ए -मोहम्मद ने कश्मीर में एक हृदय विदारक आतंकवादी हमला किया जिसकी मैं और सारा देश भर्त्सना करता है। इस आतंकी हमले का समुचित जबाब देने के लिए सारा देश एकजुट है।
— Rajnath Singh (@rajnathsingh) February 14, 2019
இதனிடையே, புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீர் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை காலை 9.15க்கு கூடுகிறது. இதில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் படுகிறது
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத சக்திகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று குடியரசு தலைவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.