ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் நடிகர் அலீ சேர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் அலீயின் மேல் சர்ச்சை நடைபெற்று வருகிறது.
“நான்கைந்து கடைகளைப் பாருங்கள் – அலீ ஜகன் மீதே நம்பிக்கை வைத்துள்ளார்” என்று கலாய்க்கின்றன.
புரியவில்லை அல்லவா?
மேலே படியுங்கள்.
“நகைகள் வாங்க வேண்டுமென்றால் அதற்குத் தொடர்பான விளம்பரங்களைப் பார்ப்போம். அது இயல்புதான். அந்த விளம்பரத்தை அரசியலில் கூட அப்ளை செய்தால் எப்படி இருக்கும்? என்றால் அலீ எபிசோடு போல் இருக்கும்” என்று சேனல்கள் கலாய்த்து வருகின்றன.
இதுதான் அந்த சர்ச்சையின் சாராம்சம். அலீ மீதான ஜோக்கின் சாராம்சமும் இதுவே. நல்ல புரிதலுக்காக ஒரு முறை அலியின் அரசியல் விவகாரத்தைப் பார்த்து விடுவோம்.
காமெடியன் அலீ யாருடைய கட்சியில் சேரப் போகிறார்? இந்தக் கேள்வி கடந்த சில மாதங்களாக தெலுங்கு மாநிலங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
அலீ எப்படிப்பட்ட முடிவு எடுக்கப் போகிறார் என்பதிலிருந்து அலீ எந்தக் கட்சியில் சேர்ந்தால் எங்கு நின்று தேர்தலில் போட்டியிடுவர் என்பது வரை பல கோணங்களில் சர்ச்சை தொடர்ந்தது.
இறுதியாக அலீ ஒய்.எஸ்.ஆர் கட்சிக்கு “ஜெய்!” என்றார். ஜகன் முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஜகன்மோகன் ரெட்டியை நேற்று ஹைதராபாத்தில் அவருடைய “தாமரைக் குளம்” வீட்டில் சந்தித்து அவருடைய கட்சியில் இணைந்தார்.
49 வயதுள்ள முகம்மது அலீ பாஷா என்னும் அலீ பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், “நான் சிறு வயதிலிருந்தே நடிகர்களில் என்.டி. ராமாராவ் ரசிகன். அரசியலில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ரசிகன். அதே போல் எனக்கு ஜகன் கட்சியின் கொள்கைகள் பிடித்துள்ளன. அதனால் இந்தக் கட்சியில் சேர்ந்துள்ளேன்.
ஆந்திரா முழுவதும் அலைந்து திரிந்து கட்சிப் பிரச்சாரம் செய்யப் போகிறேன். ஜகன் அவர்களை முதலமைச்சராக்குவதே என் லடசியம்” என்று பேசியுள்ளார்.
மேலும், “உடனடியாக தேர்தலில் போட்டியிட எந்த திட்டமும் இல்லை. ஆனால் எனக்கு அமைச்சராகும் கனவு உள்ளது” என்றும் கூறியுள்ளார். அதோடு, “ஜகன் மோகன் ரெட்டி சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார். அதனால் அவர் கட்சியில் சேர்ந்துள்ளேன்” என்றும் கூறத் தவறவில்லை.
இப்போது அலீ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பக்கம் ஏன் சாய்ந்துள்ளார்? என்ற கோணத்தில் ஆராய்ந்து அரசியல் வட்டாரங்கள் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளன.
இதில் வியப்பு ஒன்றுமில்லை. எந்த செலிபிரிடியாவது ஏதாவது கட்சியில் சேர்ந்தாலோ யாராவது கட்சி தாவினாலோ இது போன்ற சர்ச்சைகள் நடப்பது சகஜம்தான்.
ஆனால் நகைச்சுவை நடிகர் அலியைச் சுற்றி அரசியல் வட்டாரத்தில் நடக்கும் விவாதத்தில் ஒரு ஜோக் சலசலப்பை ஏற்படுத்துகிறது.
அது என்னவென்றால் லலிதா ஜுவல்லரியின் விளம்பரத்தை மையமாக வைத்து அதே மாதிரியில் ஒரு ஜோக் சேனல்களில் வைரலாகி வருகிறது.
“எங்கள் கடையில் ஒரு நகையைத் தேர்ந்தெடுத்து அதன் மதிப்பையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நகையை மொபைலில் புகைப்படமும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் வைத்துக் கொண்டு நான்கைந்து ஷோ ரூம்களுக்குச் சென்று ஒப்பிட்டுப் பாருங்கள்!” என்பது அந்த விளம்பரம். இறுதியல், “பணம் சும்மா வரதால்லவா?” என்று டயலாக் வேறு இருக்கும்.
இந்த விளம்பரம் சாதாரணம் பலனை அல்ல…. எதிர்பாராத அளவு கொள்ளை லாபத்தை அள்ளி வந்து கொடுத்தது லலிதா ஜுவல்லரிக்கு…. இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
அதே போல் அலீ கூட அப்படியே இந்த் விளம்பரத்தைப் போலவே நடந்து கொண்டுள்ளார்.
தெலுகுதேசம் கட்சி, ஜனசேனா, ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் என்று மூன்றிலும் சென்று பேசிப் பார்த்து எது தனக்கு சரியானது என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார் என்றும் இறுதியில் ஜகன் பக்கம் ஆர்வம் காட்டியுள்ளார் என்றும் அந்த ஜோக் இங்கு வைரலாகி வருகிறது.
அலீயை மையமாக வைத்து அரசியலில் இந்த ஜோக் எதனால் வெடித்து வருகிரதென்றால் அலீ நேற்று முன்தினம் வரை சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சியோடு தொடர்பில் இருந்தார். சில அமைச்சர்களையும் சந்தித்து வந்தார். அதனால் அவர் டிடிபியில் சேரப் போவது உறுதி என்ற பேச்சு பலமாக அடிபட்டது.
அதே சமயம் ஜனசேனா தலைவர் பவன்கல்யாணுடன் அலீக்கு நல்ல நட்புத் தொடர்பு உள்ளது. இந்தப் பின்னணியில் அவர் தன் முடிவைத் தெரிவிக்காமல் சஸ்பென்ஸ் கொடுத்ததால் அலீ ஜனசேனா பக்கம்தான் சாயப் போகிறார் என்ற விவாதம் அரசியலில் பலப்பட்டது.
ஆனால் அலீ மட்டும் இந்த மூன்று கட்சிகளிலும் தனக்கு அனுகூலமான, தன் அரசியல் இலக்குகளை அடைவதற்குத் தோதான கட்சி எது என்ற முடிவின் மேல் மனதிலேயே கணக்கிட்டு பரிசீலனை செய்துள்ளார் என்று அரசியலில் பேச்சு அடிபடுகிறது.
இறுதியாக நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்து ஜகன் கையால் கழுத்தில் துண்டு மாலை போட்டுக் கொண்டார் என்றும் லலிதா ஜுவல்லரி விளம்பரத்தையே தானும் பின்பற்றியுள்ளார் என்றும் ஜோக் சலசலப்பளிக்கிறது.
ஆந்திரப்பிரதேஷ் ராஜமுந்திரியை பிறப்பிடமாகக் கொண்ட அலீ சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் பார்ட்டியில் தனக்கு நல்ல எதிர்காலம் கிடைக்காது என்று தோன்றியதால் அதில் சேரவில்லை என்று நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
“நட்பு வேறு. அரசியல் வேறு“ என்று பவன்கல்யாணின் ஜனசேனாவில் சேராததற்கு விளக்கமளித்துள்ளார்.
நகை வாங்கும் பலர் லலிதா ஜுவல்லரி விளம்பரத்தை மேற்கொண்டிருப்பார்கள் என்றும் ஆனால் அதனை அரசியலில் அப்ளை செய்திருப்பது அலீதான் என்றும் ஜோக் அடித்து சேனல்கள் அந்த காமெடியனைக் கலாய்த்து வருகிறன்றன.
“இது மிகவும் சரியான பரிசீலனை. அலீயின் வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும்!” என்று கூட முத்தாய்ப்பு வைக்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
- ராஜி ரகுநாதன்