கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் சூளுரைத்துள்ளார்.
ராகுல் வயநாட்டில் போட்டி என்று காங்கிரஸின் உம்மன் சாண்டி அறிவித்த போதே, காங்கிரஸ் என்ன சொல்ல வருகிறது என்று ராகுல் காந்திக்கு எதிராக கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏற்கெனவே கொந்தளித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என ஏ.கே.அந்தோணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது இப்போது கேரளத்தில் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது
அமேதி தான் ராகுலின் சொந்தத் தொகுதி. இதில் 2009, 2014 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு ராகுல் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும் அங்கே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க ராகுல் வயநாட்டில் போட்டியிடுவார் என்று கூறியிருந்தது.
மேலும், வயநாடு முஸ்லிம்கள் ஓட்டு 49 சதம் உள்ள, காங்கிரஸுக்கு பாதுகாப்பான வெற்றித் தொகுதி என்பதால், ராகுல் போட்டியிடுவது இங்கே பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதி இந்தத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் ராகுல் என்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இது குறித்துக் கூறிய போது, “யாரும் எங்கிருந்தும் போட்டியிடலாம், ஆனால் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்று மக்களுக்கு ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும். வயநாட்டில் இடதுசாரிக்கு எதிராக போட்டியிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி, ராகுலின் வயநாடு தொகுதித் தேர்வை கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.
அதே நேரம், தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வெற்றிக்காக பாடுபடுவோம் என்று தமிழக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அறிவித்து வேலை செய்து வருகின்றனர்.
அதே போல்… வயநாட்டில் கம்யூனிஸ்ட்டை தோற்கடிப்போம் என்கிறது காங்கிரஸ்!
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம் என்கிறது அதே காங்கிரஸ்..!
இது இப்போது பாஜக., முகாம் கேலி செய்யும் விதத்தில் மாறியிருக்கிறது! அடுத்தடுத்த மாநிலங்களில் நிலைமாறும் இரு கட்சிகளின் கொள்கைகள் குறித்து பாஜக., பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது!