மேற்கு வங்கத்தில் ராகுல் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி இல்லை என்று மம்தா அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால், அவரது பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 14-ஆம் தேதி நடைபெற உள்ள பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற திட்டமிடப் பட்டிருந்தது. இதற்காக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை அங்குள்ள போலீஸ் மைதானத்தில் தரையிறங்க காங்கிரஸார் அனுமதி கோரியிருந்தனர்.
ஆனால் போலீஸ் மைதானத்தில் ராகுல் வரும் ஹெலிகாப்டர் தரையிறங்க காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதை அடுத்து ராகுல் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ரத்து செய்யப் பட்டுவிட்டது என்று காங்கிரஸார் கூறினர்.
இருப்பினும், சட்ட விதிகளின் படி ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், காங்கிரசார் மாற்று இடத்தை தேர்வு செய்து மீண்டும் தங்களை அணுகவில்லை என்றும் சிலிகுரி காவல் ஆணையர் மீனா தெரிவித்துள்ளார்.
முன்னதாக மெகா கூட்டணி ஆசையில் இருந்த ராகுல், மம்தா தன்னை பிரதமர் வேட்பாளராக ஏற்காத நிலையில், கடும் விரக்தியிலும் கோபத்திலும் இருந்தார். இதை அடுத்து மம்தா பானர்ஜியை குற்றம் சாட்டி, மேடைகளில் பேசினார். இந்நிலையில், பாஜக., தலைவர் அமித் ஷாவுக்கு அளித்த அதே நெருக்கடியை ராகுலுக்கும் அளித்து தனது நியாய் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி!