காட்டுக்குள் இருக்கும் வாக்குச்சாவடிதான்… ஆனாலும் அங்கே நூறு சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில், மூன்றாம் கட்டமாக இன்று 116 மக்களவை தொகுதிகளுக்கான 3ஆம் கட்டத் தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 63 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது, இந்த வாக்கு சதவீதம் மிகவும் குறைவுதான்.
நூறு சத வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் தொடங்கி, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்னும் நடிகர்கள் என பலரும் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு செய்திகளைக் கொண்டு சென்றார்கள். ஆயினும் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாகவே உள்ளது.
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தின் ஜுனாகட்டில் கிர் காடு பகுதியில் வாக்கு மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இங்குள்ள மையத்தில் வாக்களிக்க வேண்டிய நபர், ஒரே ஒரு வாக்காளர் தான். பரத்தாஸ் பாபு என்ற அந்த முதியவர் இன்று தனது வாக்கினை இந்த வாக்குச் சாவடிக்கு வந்து பதிவு செய்துள்ளார்.
தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் அவர் கூறியபோது, ஒரு வாக்குக்காக இந்த வாக்கு மையத்திற்கு அரசு செலவு செய்துள்ளது. நான் வாக்குப் பதிவு செய்து விட்டேன். இதனால் இந்த மையத்தில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. அனைத்து இடங்களிலும் 100 சதவீத வாக்கு பதிவாக, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்… என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு வாக்கு பதிவானாலும் 100 சத வாக்கு பதிவான சாதனையைப் பெற்றுவிட்டது இந்த வாக்குச் சாவடி!