காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் பெருமாளின் தரிசனத்தை பிரதமர் மோடி தவிர்த்துள்ளதாகக் கூறப் படுகிறது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருமாளை தரிசிப்பதற்கான ஆவல் பக்தர்களிடம் பெருமளவில் காணப் படுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் மட்டுமே புஷ்கரிணி நீரில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பதால், பெருமளவிலான மக்கள் கூட்டம் கூட்டமாக அத்திவரதரை தரிசிக்க ஆவலுடன் திரண்டு வருகின்றனர்.
அத்திவரதர் பெருமானின் தரிசனத்தை முதலில் தொடங்கி வைத்ததே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என்பதால், இது எந்த அளவுக்கு விவிஐபி., முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது வெளித்தெரிந்தது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் வந்து, அத்திவரதரை தரிசித்துச் சென்றார்.
மேலும், அமைச்சர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மற்றும் திமுக., தலைவர்களின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் வந்து தரிசித்துச் செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், ஆன்மிக நம்பிக்கையுடன் தமது வழிபாட்டு நெறிமுறைகளை ஒளிவுமறைவின்றி பொதுமக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் ஆலயங்களுக்கு பக்தி சிரத்தையுடன் சென்று வழிபட்டு வரும் பிரதமர் மோடியும், அத்திவரதர் தரிசனத்துக்கு வருவார் என்று கூறப்பட்டது.
இது குறித்த தகவல்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வைரலாகப் பரவியது. குறிப்பாக, வரும் 23ம் தேதி அத்திவரதரை சயனக் கோலத்திலும் தொடர்ந்து நின்ற கோலத்திலும் பிரதமர் தரிசிக்க உள்ளார் என்று தகவல்கள் பரவின. ஆனால் அவற்றில் உண்மை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா மறுத்தார்.
இதனிடையே, அத்திவரதர் தரிசனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும், பக்தர்களுக்கு உள்ள சிரமங்களும் கோபங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட நெரிசலும், அதனால் 4 பேர் உயிரிழந்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திமுக.வினர் உதவியுடன் ரவுடி வரிச்சியூர் செல்வம் வந்து தரிசித்து, விவிஐபி மரியாதையுடன் கோயிலில் அத்திவரதர் முன் அமர்ந்து வெகுநேரம் செலவிட்டது தொடர்பாக மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸார் மட்டுமின்றி, மத்திய உளவுப் பிரிவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உளவுப் பிரிவு டிஜிபி.,யிடம் தகவல் கேட்டதாகவும், பிரதமர் பயணத் திட்டம் விவாதிக்கப் படும் நிலையில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் பேச்சு எழுந்தது.
இந்நிலையில், நெரிசல், உயிரிழப்பு, மற்றும் மத்திய உளவுப் பிரிவு கொடுத்த அறிக்கை ஆகியவற்றால், பிரதமர் மோடியின் அத்திவரதர் தரிசன திட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.