தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Gods are too many for Hindus – Give up your Philosophy & Culture, if you want development – இந்தியர்களுக்கு கடவுள்கள் அதிகம். இது வளர்ச்சியை தடுக்கக் கூடியது”. பிரிடிஷார் பிரச்சாரம் செய்த இந்தப் பொய்யை நம் தேசத்து மேதாவிகளும் நம்பினர்.
மரங்களையும் புற்றையும் தெய்வமாக எண்ணும் சிந்தனை மீது வெட்கம் கொள்ளும் மனநிலை அதிகரித்தது. மத மாற்றங்களுக்கு வாய்ப்பும் அதிகரித்தது. ஒரே கடவுள், ஒரே புத்தகம், என்னுடையதே உண்மையான கடவுள், மீதி எல்லாம் சைத்தான்கள் என்ற சிந்தனை பிரபஞ்சத்தை ரத்தம் சிந்தச் செய்தது.
இந்தியக் கலாசாரம் உலகெங்கும் பரவி இருந்தவரை அமைதி நிலவியது. ‘செமிடிக்’ மதங்கள் தோன்றிய பின் விக்ரக வழிபாடு செய்பவர்களைத் தேடித் துரத்தி கொன்றழித்தனர். பல நாடுகள் ரத்தக் களரியால் மதம் மாறின.
பாரத தேசம் உபதேசித்த வேதாந்தமும் படைப்பு அனைத்தும் இறைவன் மயம் என்ற சத்தியமும் மனிதனையும் மனிதனையும் ஒன்றிணைத்தது. இயற்கையைப் பாதுக்காக்கும்படி உற்சாகமூட்டியது. “எந்த உருவத்தில் வழிபட்டாலும் பரமாத்மா ஒருவரே! (நிச்சல, நிர்குண, நிர்விகார, அவ்யக்த, அப்ரமேய) ஸ்திரமானவர், குணங்கள் அற்றவர், விகாரங்கள் அற்றவர், தோற்றத்திற்கு எட்டாதவர், பிறப்பு இறப்பு அற்றவரான பரமாத்மா பெயர்களுக்கும், ரூபங்களுக்கும் அப்பாற்பட்டவர். அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கிறார்” என்ற ஹைந்தவ சித்தாந்தம் பிரபஞ்ச அமைதிக்குத் தேவை.
சாமானியர்களும் புரிந்து கொண்டு, தம் விருப்பத்தைப் பொறுத்து ஏற்பதற்காக புராணங்களின் மூலம் அநேக தேவ, தேவியர் ஹிந்து மதத்தில் இருப்பதும் ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றுக்கு மூலமாக உள்ள உருவ வழிபாடும் விக்ரக ஆராதனையும் சத்துவ குணத்தை வளர்க்கும் என்பதும் நம் தேசத்தின் கடந்தகால, நிகழ்கால வரலாற்றைப் பயின்றாலே புரிந்து போகும்.
ஒரே கடவுள் என்று கூறும் மதத்தவரும் விக்ரக வழிபாட்டை எதிர்ப்பவர்களும் நம் தேசத்தில் நடத்திய ஹிம்சைகளே இதற்கு உதாரணம்.
“உன்னிலும், என்னிலும் பகவான் இருக்கிறான். பிறரை இம்சிப்பது பாவத்திற்கு மூலம்!” என்பது நம் தேசத்தில் பாமரருக்குக் கூட தெரிந்த வேதாந்தம்.
இதனைப் புரிந்து கொள்ள இயலாத மேற்கத்தியர் பாரத தேசத்தின் பூஜை முறைகளை நிந்தித்தனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள் பற்றிய பாரதிய சிந்தனைகளை அநாகரிகம் என்று பிரச்சாரம் செய்தவர்களில் ஆங்கிலேய ஆட்சியர் மட்டுமல்ல… கம்யூனிஸ்ட் கோட்பாட்டாளர் காரல்மாக்ஸ், சமுதாய விஞ்ஞானியாக பெயர் பெற்ற ஜெர்மனியைச் சேர்ந்த மாக்ஸ்வெபர் போன்ற போலி மேதாவிகள் பலர் உள்ளனர்.
பாரத தேசத்தை எப்போதுமே பார்த்திராத, நம் கலாசாரத்தை சற்றும் புரிந்து கொள்ளாத இவர்கள் இருவரும் நம் வேதாந்த சாஸ்திர நூல்களை படித்து பயிற்சி செய்ததோ நம் தேசத்திலுள்ள அறிஞர்களோடு நேருக்கு நேர் பேசியதோ இல்லை என்பது விந்தை.
காரல்மார்க்ஸ் தான் தோற்றுவித்த கம்யூனிஸத்தைப் பரப்புவதற்கு பாரத தேசத்தின் கலாசாரத்தை அழிப்பது முக்கியம் என்று எண்ணினார். இந்தியர்கள் முரடர்கள் என்றும் அநாகரிகம் கொண்டவர்கள் என்றும் உரையாற்றினார். ‘தாஸ் காபிடல்’ நூலைக் கொண்டுவருவதற்கு முன்பே இந்த கம்யூனிஸ்ட் கர்த்தா, அன்றைய நியூயார்க் ஹெரால்ட் (இன்று இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிப்யூன்) பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார்.
அதில் மார்க்ஸ் பாரத தேசத்தைப் பற்றி எழுதும்போது, “இது வளர்ச்சியோ முன்னேற்றமோ அற்ற தேசம். இரண்டாயிரம் ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாத சமூகம் வசிக்கும் முரட்டு காட்டுவாசிகளின் தேசம்! (Barbaric Country)” என்று குறிப்பிட்டார்.
“பொருளாதார ரீதியாக கம்யூனிசம் வளர வேண்டுமென்றால், புரட்சி வளர வேண்டுமென்றால், பாரத தேசம் முன்னேற்றப் பாதையில் நடக்க வேண்டுமென்றால், இங்குள்ள கலாசாரத்தையும் பொருளாதார நிலையையும் மூலத்தோடு அழிக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியர் முடிந்த வரை இந்த முயற்சியில் வெற்றி பெற்றார்கள். இல்லாவிட்டால் பசுமாட்டையும் குரங்கையும் பாம்பையும் வணங்கும் வழக்கம் உள்ள இந்த தேசம் காட்டுத்தனமாகவே இருந்துவிடும்” என்றார்.
சமீபத்தில் வாழ்ந்த மாக்ஸ்வெபர் கூட ஹிந்து, பௌத்த மதங்களால்தான் பாரத், சைனா நாடுகள் முன்னேற்றத்தில் பின்தங்கி உள்ளதாக தெரிவித்தார். இது எத்தகைய பொய் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
Source: ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ் அக்டோபர் 2018