தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி., மாணவர் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் நிதி திரிபாதி கூறினார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது… அரியலூரில் மாணவி தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம். இது குறித்து சிபிஐ., விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் செயலை ஏபிவிபி., வன்மையாகக் கண்டிக்கிறது.
நானும் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவியின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினோம். மாணவியின் தந்தை எங்களிடம் சொன்னபோது, “நான் 25 ஆண்டுகளாக திமுக., உறுப்பினர். என் மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுதும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் திமுக.,வைச் சேர்ந்த ஒருவர் கூட நேரில் வந்து ஆறுதல் சொல்லவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மரணப் படுக்கையில் மாணவி அளித்த வாக்குமூலம், தமிழகத்தில் நடக்கும் கட்டாய மதமாற்றம் பற்றி பல உண்மைகளை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் மதப் பிரசாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.