தெலுங்கில்- பி,எஸ். சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
‘அக்னி சலப ந்யாய:’ – நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சியைப் போல…!
அக்னி: – எரியாத நெருப்பு. சலப: – விட்டில் பூச்சி.
வெளிச்சமும் சிவப்பு நிறமும் கொண்ட நெருப்பினால் ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சி தானாகவே அதில் விழுந்து எரிந்து சாம்பாலாகும். அதுவே ‘அக்னி சலப நியாயம்’.
இரவில் ஒளிரும் விளக்கை நோக்கி ஏராளமான விட்டில் பூச்சிகள் பறந்து வரும். அவை விளக்கில் எரியும் நெருப்பைச் சுற்றிச்சுற்றி வந்து ஒரு கட்டத்தில் திரியின் சுடரில் மோதிக் கருகி உயிரிழக்கும்.
தாற்காலிக கவர்ச்சிக்கு அடிமையாகி நன்மை எது? தீமை எது? லாபம் எது? நஷ்டம் எது? என்று அறியாமல், உயிரைக் கூட பொருட்படுத்தாமல் முன் பின் யோசிக்காமல் செய்யும் ஆலோசனையற்ற செயலை ‘அக்னி-சலப’ நியாயத்தோடு ஒப்பிடுவர்.
விட்டில் பூச்சிகளாக விழுகின்ற இளைய தலைமுறை:-
சில உலகளாவிய நிறுவனங்கள் செய்யும் சுயநல விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு வருங்கால குடிமக்களாகிய இளைஞர்கள் பலரும் விட்டில் பூச்சிகளைப் போலவே அழிவை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். குட்கா போன்ற போதை மருந்துகளை பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றின் அருகில் விற்பனைக்கு வைத்து மாணவர்களை தவறான வழியில் செலுத்துகிறார்கள். இது உலகெங்கும் வளர்த்து பெருகி வருகிறது. போதை மருந்துகளை உட்கொண்டதால் 2017 ம் ஆண்டு சுமார் 5.85 லட்சம் பேர் இந்தியர்கள் மரணமடைந்தார்கள். அதாவது நிமிடத்திற்கு ஒருவர் வீதம். மீதி நோய்களைவிட போதை மருந்துகளே அதிக அளவு மரணங்களுக்கு காரணமாக உள்ளது.
சிகரெட், குட்கா போன்றவை உயிரை எடுக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்று அந்த பாக்கெட்டுகளின் மேல் பனங்காயளவு எழுதி வைத்தாலும் அந்த விஷ அக்னியால் ஈர்க்கப்படுபவர்கள் விட்டில் பூச்சிகள் அன்றி வேறு யார்?
இளைஞர்கள் விலைமதிப்பில்லாத தம் உயிரையும் உடலையும் புகையிலை, மது, போதைப்பொருட்கள் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கி அழித்துக் கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தீய பயிற்சிகளுக்கும் தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி ‘மயக்கம்’ என்ற நெருப்பில் விழுந்து தம் எதிர்காலத்தை சாம்பலாக்கிக் கொள்வது ‘அக்னி-சலப’ நியாயத்திற்கு மிகச் சரியான உதாரணம்.
சினிமா என்ற விஷவாயு:-
நெருப்புக்கு காற்று துணையாவது போல பொறுப்பில்லாத எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் விஷவாயு போன்ற டிவி சீரியல்களும் திரைப்படங்களும் இன்றைய தலைமுறையினரை பலி வாங்குகின்றன. இந்த விஷக் காற்றால் குடும்பங்கள் சிதறிப் போகின்றன. இவை ‘அக்னி சலப’ நியாயத்திற்கு எளிதான உதாரணங்களாக நிற்கின்றன.
காதல் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளாய் இளைய தலைமுறை:-
கடந்த சில தசாப்தங்களாக காதல் நெருப்பில் விட்டில்கள் ஆகின்ற ஹிந்து பெண்களின் வேதனைகளும் அநியாயமாக பலி ஆகின்ற சோகக் கதைகளும் பல கேள்விப்படுகிறோம்.
ஹிந்து இளம் பெண்களை வலையில் பிடிப்பதற்காக நடக்கும் சதித்திட்டங்கள், இதயத்தை வருத்தும் கதைகள், லவ் ஜிஹாத் என்ற பெயரில் நடக்கும் அக்கிரங்கள் போன்றவை இந்த விட்டில்பூச்சி நியாயத்திற்கு உதாரணங்களாகின்றன. வன்முறையாளர்களின் கையில் சிக்கும் பெண்களின் வாழ்க்கை விட்டில்களைப் போல் அழிகின்றன. அவர்களுக்கு மத முகமூடியிட்டு பிள்ளை பெறும் இயந்திரங்களாக மாற்றும் சதிகாரக் கதைகள் அனைத்தும் விளக்கு-விட்டில் பூச்சி நியாயத்திற்கு நவீன உதாரணங்களே! இந்த விஷ நெருப்பின் தீ நாக்குகளால் ஈர்க்கப்படக் கூடாதென்று இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறி விளக்க வேண்டும்.
வஞ்சனைத் தீ:-
நீறு பூத்த நெருப்பு போன்ற வன்முறையாளர்கள் போலிப் பெயர்களோடு முகநூல் மூலம் காதலை தெளிக்கிறார்கள். இந்த வலையில் விழும் இளைய தலைமுறை அந்த காமத்திற்கு இரையாகி அழிகிறார்கள்.
வீடியோ விளையாட்டுத் தீ:-
‘பப்ஜி’ போன்ற வீடியோ விளையாட்டுத் தீக்கு அஹுதியாக இளைய தலைமுறை ஈர்க்கப்படுவது மற்றுமொரு துரதிருஷ்டம். இந்த கொடூரமான விளையாட்டு என்ற காட்டுத் தீயை அணைக்காவிட்டால் மனித இனத்திற்கே பெருநஷ்டம்.
கூடா நட்புத் தீ:-
சுவாமி விவேகானந்தரின் அபிமானியாக இருந்த ஒரு இளைஞன் கூடா நட்பால் அப்ஜல்குரு போன்ற தேச துரோஹிக்குத் தொண்டனாகி வாழ்வை நாசம் செய்து கொண்டது 1990ல் நடந்த கதை. தன்னார்வத் தொண்டு என்ற மாயவலையில் இடது சாரிகள் இளைய தலைமுறையை ஈர்த்து அழித்த உண்மைக் கதைகள் பலப்பல.
பேராசைத் தீ:-
சீக்கிரம் கிடக்கும் பணத்தால் ஈர்க்கப்படும் அப்பாவிகள், சூதாட்டம், பெட்டிங், கோடி ரூபாய் பரிசு போன்ற பேராசைத் தீக்கு இரையாகிறார்கள். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் செல்வத்தை இழக்கும் அப்பாவி மக்கள் இந்த விளக்கு-விட்டில் பூச்சி நியாயத்திற்கு உதாரணங்கள்.
இலவசத் தீ:-
ஓட்டு போடுபவர்களை ஈர்ப்பதற்கு சில அரசியல் கட்சிகள் மூட்டும் இலவசம் என்ற தீயில் அப்பாவி மக்கள் விட்டில் பூச்சிகளாகி அழிகிறார்கள்.
பிரான்ஸ் தோற்றது போர்க்களத்தில் அல்ல:-
முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற பிரான்ஸ் இரண்டாம் உலகப் போரில் மோசமாகத் தோற்றது. காரணம்… முதல் உலகப் போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பிரான்சில் சூதாட்ட விடுதிகள், காசினோக்கள், கிளப்புகள், பப்புகள் மிக அதிகமாகத் திறக்கப்பட்டன. மக்களை தீய பழக்கத்திற்கு அடிமையாக்கின. France lost the war not in the battle but in the clubs in Paris என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவ்விதமான தீய பழக்கம் என்ற தீ தனி மனிதனை மட்டுமல்ல சமுதாயத்தையும் தேசத்தையும் வீரியம் இழக்கச் செய்யும்.
கவர்ச்சிக்கு அடிமையாகாதே!
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்து வித கவர்ச்சிகளுக்கு அடிமையாகி அழிவை விலை கொடுத்து வாங்கும் உயிரினங்கள் எவ்வாறு நமக்கு பாடம் கற்பிக்கின்றன என்பதை போதிக்கும் யோகவாசிஷ்டத்தில் ஒரு ஸ்லோகம்- “ஒலியால் ஈர்க்கப்பட்ட மான் வேட்டைக்காரனிடம் சிக்குகிறது. தொடுதலுக்கு இணங்கி யானை பிடிக்கப்படுகிறது. வடிவத்தால் ஈர்க்கப்பட்டு விட்டில்பூச்சி நெருப்பில் விழுகிறது. ருசிக்கு ஆசைப்பட்டு மீன் உயிரை இழக்கியது. மணத்தால் ஈர்க்கப்பட்டு வண்டு தாமரைப்பூவில் சிக்கிக் கொள்கிறது” என்று விவரிக்கிறது.
அரசாளுபவர்கள் இத்தகைய கவர்ச்சித் தீயை அணைக்காவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கிறது இந்த நெருப்பு-விட்டில் பூச்சி நியாயம். மனிதன் தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்துவித கவர்ச்சிகளிடமிருந்தும் விலகி மனத்திடத்தோடு வாழ்ந்து சாதிக்க வேண்டும். இதற்காக யோகேஸ்வரன் கூறும் மந்திரம் இது…
விஷயேந்த்ரிய சம்யோகாத்வத்ததக்ரே அம்ருதோபமம் |
பரிணாமே விஷமிதம் தத்சுகம் ராஜசம் ஸ்ப்ருதம் || (பகவத்கீதை- 18/38)
பொருள்: ராஜஸ சுகம் என்பது முதலில் அமிழ்தம் போல் கவர்ந்து, பின்னர் விஷமாக மாறும்.
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன: |
காம: க்ரோத ஸ்ததாலோபஸ்தஸ்மாத் தேதத்ரயம் த்யஜேத் ||
(பகவத்கீதை- 16/21)
பொருள்: காமம், குரோதம், லோபம் என்பவை நரகத்திற்கான மூன்று வாயில்கள். மனிதனை அழிக்கும் இந்த மூன்றிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். பலவிதமான விஷ நெருப்புகளால் கவரப்படாமல் இருக்க இந்த கீதை மந்திரங்கள் நம்மைக் காக்கட்டும்.
—-0o0—-