தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
பாரதத்தின் பாரம்பரியச் செல்வம் எனக்கு பெருமையளிக்கிறது. “விஞ்ஞான ஆராய்ச்சிகள் முன்னேற்றம் காணும் போது ஹிந்து மதத்தின் உயர்வு வெளிப்படும்” என்று சுவாமி விவேகானந்தர் 19 வது நூற்றாண்டின் இறுதியில் கூறினார். அந்த தீர்க்கதரிசியின் சொற்கள் சத்தியம் என்று நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. நம் மதத்தை காட்டுமிராண்டி வாழ்க்கை முறை என்றும் இயற்கையை பார்த்து பயப்படும் காட்டுவாசிகளின் குரலே வேதங்கள் என்றும் இந்து மதம் மூட நம்பிக்கைகளின் பிறப்பிடம் என்றும் தம் அபிப்ராயங்களை வெளிப்படுத்தி, மேற்கத்தியர் தம் அரசாட்சியில் அன்றைய பாரதிய மூளையை களங்கப்படுத்தினார்கள். அந்த களங்கமடைந்த இந்தியர்கள் நாட்டையும் அதன் பாரம்பரியத்தையும் ஹிந்து தர்மத்தையும் பழக்க வழக்கங்களையும் நூல்களையும் இகழ்ந்து பேசி மேற்கத்திய கலாச்சாரத்தை வழிபடத் தொடங்கினார்கள். இன்றும் கூட அத்தகையோருக்குக் குறைவில்லை.
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற்கத்திய மேதைகளில் சிலர் அதிலும் விஞ்ஞான மற்றும் தத்துவ சிந்தனை கொண்டவர்கள் ஹிந்து தர்ம நூல்களிலும் பழக்க வழக்கங்களிலும் உள்ள உயர்வைத் தெரிந்து கொண்டு புகழ்ந்து வருகிறார்கள். மாக்ஸ்முல்லர், ஜார்ஜ் பெர்னாட்ஷா, மார்க் ட்வைன், ஜான் உட்ராப் போன்றவர்களில் தொடங்கி குவாண்டம் பிசிக்ஸ் முன்னேற்றமடைந்த இன்றைய விஞ்ஞான யுகம் வரை நம் நூல்களில் உள்ள நித்திய நூதனமான விஞ்ஞானத்தை உணர்ந்து போற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
சமஸ்கிருத மொழியின் சர்வ வல்லமையுள்ள முழுமையான இயல்பைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். அதனைக் கற்று பயிற்சி செய்து புதிய விஷயங்களை தரிசித்து வருகிறார்கள்.
விஞ்ஞானம், கலை, தத்துவ ஞானம் இந்த மூன்றும் ஒன்றிணைந்ததே பாரதிய வேத கலாச்சாரம் என்ற அற்புத உண்மை ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது.
ஒரு காலத்தில் அர்த்தமில்லாத கூத்தாக தூக்கி எறியப்பட்ட யோகம், தியானம் போன்றவற்றை இப்போது அனைத்துலக மாணவர்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை என்று தலையில் தாங்கிக் கொண்டாடுகிறார்கள். அதே வரிசையில் ஆயுர்வேத மருத்துவ முறையை முழுமையான அறிவியலாகவும், இப்பொழுது உள்ள நவீன மருத்துவத்தை விட பல ஆயிரம் ஆண்டுகள் அட்வான்ஸ்டு சிகிச்சை முறை என்றும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.
மூடநம்பிக்கைகள் என்று ஏளனம் செய்யப்பட்ட மந்திரங்களும் யந்திரங்களும் அவற்றின் தாக்கமும், அவற்றில் உள்ள சூட்சும அறிவியலும் புகழுக்குப் பாத்திரமாகியுள்ளன. மேல்நாட்டு மேதைகள் பரிசீலித்து ஆராய்ந்து அவற்றைக் கடைபிடித்து விஞ்ஞான முறையில் நூல்களாக எழுதி வருகிறார்கள். நம் விக்கிரகங்கள் மற்றும் கோவில்களின் விஞ்ஞானத்தில் உள்ள மர்மங்கள், சிறப்புகள் போன்றவற்றை கலைக்கோணத்தில் மட்டுமின்றி அறிவியல், தத்துவ கோணத்திலும் கண்டறிந்து போற்றுகிறார்கள்.
வேதங்களை பாரதிய ருஷிகள் வெளிப்படுத்திய சாஸ்வதமான விஸ்வ ரகசிய விஞ்ஞானங்களாகவும் உயர்ந்த தத்துவ அம்சங்களாகவும் தரிசிப்பது கூட இருபதாவது நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. இன்று வளர்ச்சி அடைந்த ஆராய்ச்சியால் தெரிகின்ற விண்வெளி விஞ்ஞானம் வேத மந்திரங்களிலும் அதனை ஆதாரமாகக் கொண்டு விரிவடைந்த ஜோதிட சாஸ்திரத்திலும் பிரத்யக்ஷமாக தென்படுவதைக் கண்டு ஆச்சரியத்திற்கு உள்ளாகிறார்கள்.
நாசதீய சூக்தம், அருணப்ரஸ்ன, புருஷ சூக்தம் போன்ற வேத அம்சங்கள் மற்றும் புராணங்களில் உள்ள அந்தரிக்ஷ விவரங்கள் கம்பீரமான விஸ்வ விஞ்ஞானங்களே என்று ஆதாரப்பூர்வமாக சான்றுகளோடு எழுதப்படுகின்ற நூல்கள் கிடைக்கின்றன.
சில காலத்திற்கு முன்பு, “முன்னேற்றமடைந்த பௌதீக விஞ்ஞானத்தின்படி இந்த பிரபஞ்சம் ஒரே சத்தியத்தின் மீது ஆதாரப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை என்பது ஒரு மாயை” என்று நவீன பௌதிக சாஸ்திர அறிஞர் ஒருவர் கூறினார். மேலும் அவர், “சிறிது சிறிதாக நம் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சிகள், இந்து மதத்தில் உள்ள உபநிஷத்துகள் கூறிய விஷயம் பரம சத்தியம் என்று நிரூபித்து வருகின்றன” என்றார்.
2022 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டு அறிஞர், “நேஹ நானாஸ்தி கிஞ்சன, ஏகமேவாத்விதீயம் ப்ரஹ்மா, ப்ரஹ்ம சத்யம் ஜகன்மித்யா” முதலான வேதாந்த வாக்கியங்களின் பொருளை குறிப்பிட்டடு உரையாற்றிய செய்தி கவனிக்கத்தக்கது.
அணு விஞ்ஞான பரிசோதனைகளின் தொடக்கத்தில் ஓபன் ஹேமெர், ப்ரிட்ஜாப் காப்ரா, டாக்டர் கென்னெத் போர்ட் போன்றவர்கள், “அணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மைகள் இந்து மத நூல்களில் காணப்படும் கருத்துக்களோடு பொருந்தியுள்ளன” என்று கூறுயதோடு “ஹிந்து மத நூல்கள் விஞ்ஞான நூல்களே” என்று சான்ற்டுகளோடு அறிவித்தனர்.
வரலாறு மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணும் அறிஞர்கள், ஹிந்து தர்மம் என்பது வெறும் பரலோக இறைவனை நம்பும் மதம் அல்ல என்றும் விஸ்வமெங்கும் வியாபித்து, விஸ்வத்திற்கு அப்பாற்பட்ட பரம சத்தியத்தை பல விதங்களில் வெளிப்படுத்தும் தத்துவ விஞ்ஞானம் என்றும் அங்கீகரித்து வருகிறார்கள்.
ஆனால் மதவெறி பிடித்து அச்சுறுத்தும் வர்க்கங்கள் இந்து தர்மத்தை அடக்குவதற்கும் அழிப்பதற்கும் முயற்சிப்பதோடு ஹிந்து சித்தாந்தங்களுக்கு புதிய வார்த்தைகளைச் சேர்த்து காப்பி அடித்து தம்முடையதாக வியாபாரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். தீய விளக்கங்கள் கூறுவது, சேற்றை வாரிப் பூசி, பாகுபாடுகளை உசுப்பி விடுவது போன்றவற்றை மும்முறமாகச் செய்கிறார்கள். அவர்கள் வீசும் பணத்திற்கும் ஓட்டு வங்கி அரசியலுக்கும் பழக்கப்பட்டு போன இந்நாட்டு அரசியல்வாதிகளும் போலி மேதாவிகளும் ஊடகப் பிரமுகர்களும் இந்த உண்மைகளை வெளியிடுவதற்கு முயற்சிப்பதில்லை. அதோடு கல்வித்துறையிலும் கலைத்துறையிலும் மாறாத பழைய முறையையே இன்னும் தொடர்கிறார்கள்.
எது எப்படி ஆனாலும் அனைத்து புறங்களிலும் இருந்து ஒளிமயமாக வெளிப்படுகின்ற சத்யப்பிரவாக ஒளிக்கற்றைகளை யாரும் நிறுத்த முடியாது. அணைக்க முடியாது.
கேளிக்கை வாழ்க்கையே முக்கியம் என்று வாழ்ந்து வரும் இந்த தேச இளைஞர்களுக்கு இந்த விஷயங்கள் சென்று சேர்வதில்லை. அறிஞர்கள் தாமும் அறிந்து கொண்டு அவர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
பாரதிய ஹிந்து விஞ்ஞான வைபவம் இந்த தேசத்தின் பாரம்பரிய சொத்து என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமையோடு எண்ண வேண்டும். ஆராய்ந்து பரிசோதித்து அறிய வேண்டும். கிடைக்கும் அதிகாரப்பூர்வமான உண்மைகளைப் பரப்ப வேண்டும்.ஒவ்வொரு மனிதனையும் முழுமையான மாணவனாக வளர்த்தெடுக்கும் இயல்பும் சாமர்த்தியமும் சனாதன தர்மத்தில் இருக்கிறது என்ற உண்மை முழுமையாகப் பிரகாசிக்கும் காலம் விரைவில் வரும்.
(ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ் ஜனவரி 2023 தலையங்கம்)