கிருமி நாசினி தெளித்த போது, வரிசையில் நின்று கேட்டைக் கடந்து பைக்கில் சென்ற பணியாளர் ஒருவரின் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அகமதாபாத் நகரில் உள்ள புகழ்பெற்ற அரவிந்த் மில் என்ற ஜவுளி உற்பத்தி தொழிற்சாலை ஊரடங்கு தளர்வு காரணமாக திறக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அரவிந்த் மில்லுக்கு வந்து செல்லும் வாகனங்கள் மீது சானிடைசர் தெளிக்கப்பட்டது. இருசக்கர வாகனம் செயல்பாட்டில் இருந்தபோது, சானிடைசர் தெளித்ததால் தீப்பற்றி பெரும் பதற்றம் நிலவியது.
பைக்கினை கீழே போட்டு விட்டு, உடனடியாக ஓட்டம் பிடித்தார் அந்தப் பணியாளர். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, பைக்கையும் அங்கிருந்து விலக்கினர்.
கொதி நிலையில் சூடாக இருக்கும் உலோகப் பரப்பின் மீது ஆல்கஹால் கொண்ட சானிடைசர் தெளிக்கப் பட்டதும், அது தீப்பற்றியிருப்பது தெரிய வந்தது. எனவே, சைலன்ஸர் அல்லது இஞ்சின் அருகே ஓடும் நிலையில் வாகனம் இருக்கும் போது, சானிடைசர் தெளிக்க வேண்டாம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.