மொபைல்போன் வழி பணப்பரிமாற்ற செயலியான ‛பேடிஎம்’ செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ‘பேடிஎம்’ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது பிரபலம் ஆனது Paytm செயலி.
Android ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்து லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வந்தனர். இந்த செயலி பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விளையாட்டு சூதாட்டம் தொடர்பான விதிமீறல் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து Paytm தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
எனவே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து Paytm செயலியை புதிதாக எவரும் டவுன்லோடு செய்ய முடியாது. இந்த செயலியின் அப்டேட்ஸ் கிடைக்காது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் திரும்பக் கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பப் பட்டது.
இந்நிலையில் வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக இருக்கும். விரைவில் மீண்டும் பிளே ஸ்டோரில் Paytm பயன்பாட்டுக்கு வரும் என்று Paytm நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதில், ‘பேடிஎம் செயலியை தற்காலிகமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து புதிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது. ஏற்கெனவே பயன்படுத்தி வருபவர்கள் அதன் அப்டேட்ஸ் பெற இயலாது. எங்களது சேவை விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். உங்களது பணம் பாதுகாப்பாக உள்ளது. மேலும், நீங்கள் வழக்கம்போல் பேடிஎம் செயலியை பயன்படுத்தலாம்’ என, பேடிஎம் நிறுவனம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.