காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக.,வில் இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இமார்தி தேவி என்பவரை ஐட்டம் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூகத் தளங்களில், குறிப்பாக, டிவிட்டர் பதிவுகளில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இமர்த்தி தேவி பெயரை அவர் குறிப்பிட்டுச் சொல்சாமல்… யார் அது… அவர் பேர் என்ன… ஆம்… அதான் அந்த ஐட்டம்… என்று, அந்த தொகுதியின் வேட்பாளரை அவர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குறிப்பிட்டுக் கூறினார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருப்பதைப் போல, ஒரு பெண் தலைவரை ஐட்டம் என கூறிய கமல்நாத்துக்கு அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்புவும் தனது டிவிட்டர் பதிவில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸில் இருந்த வரை ராகுலின் ட்வீட்களை ரிடீவிட் செய்து வந்த குஷ்பு, பாஜக.,வில் இணைந்த பின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்வரை கண்டித்து ஒரு கருத்துப் பதிவிட்டுள்ளார் குஷ்பு.