லக்னோ,
உபி., மாநிலம் லக்னோவில் யாசின்கஞ்ச் பகுதியில் ஜமியா கதீஜ்துல் குப்ரா லீலாப்னத் என்ற பெயரில் மதரசா இயங்கி வருகிறது. ஆனால் இது சிறுமியர் தங்கும் விடுதியாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்து சையது முகமது ஜிலானி அஷ்ரப் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் மூத்த காவல் அதிகாரி எஸ்.பி. தீபக் குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதை அடுத்து, அவரது உத்தரவின் பேரில் போலீஸார் இந்த மதரசா விடுதிக்குச் சென்றனர். அங்கே, 101 சிறுமிகள் வசித்து வந்துள்ளனர். ஆனால், போலீசார் மீட்ட போது அங்கே 52 பேரே இருந்துள்ளனர். மற்ற சிறுமிகள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மீட்கப்பட்ட சிறுமிகள் போலீசாரிடம் கூறியபோது, மதரசா மேலாளர் பாலியல் அத்துமீறலில் தங்களிடம் ஈடுபட்டார் எனக் கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறுமிக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தச் சிறுமிகள் லக்னோவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதில் சிறுமிகளை தவறாக பயன்படுத்தி வந்த மதரசா மேலாளர் முகமது தையப் ஜியா போலீசாரால் கைது செய்யப்பட்டுடார்.