கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். என்னை சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் நலன் சார்ந்து அக்கறை எடுத்துக் கொண்ட மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 27-ம் தேதி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார்.
அதில்’கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன், மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன்’ எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Sachin Tendulkar (@sachin_rt) April 8, 2021