விராட் கோலி அதிரடி சதம் அடித்து அசத்தலாகக் கைகொடுக்க, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 6வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் ஐந்து போட்டிகளின் முடிவில், இந்தியா 4-1 என ஏற்கெனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இன்று ஆறாவது மற்றும் கடைசி போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஷர்துல் தாகூர்க்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
தென் ஆப்ரிக்க அணிக்கு ஷர்துல் சிம்மசொப்பனமாக விளங்கினார். இவரது ‘வேகத்தில்’ ஆம்லா (10), கேப்டன் மார்க்ரம் (24) ஆட்டமிழந்தனர். சகால் ‘சுழலில்’ டிவிலியர்ஸ் (30) ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் இணைந்த ஜோன்டோ, கிளாசன் ஜோடி சிறப்பாக விளையாடியது. பும்ரா பந்தில் கிளாசன் (22) ஆட்டம் இழந்தார். தாகூர் பந்துவீச்சில் பெகார்டியன் (1) பெவிலியன் திரும்பினார். கிறிஸ் மோரிஸ் 4 ரன்கள் எடுத்தார். ஜோன்டோ (54) அரை சதம் அடித்தார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்ததால், தென் ஆப்ரிக்க அணி 46.5 ஓவரில் 204 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதன் பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் விரைவாக ரன்களை சேர்த்தனர். 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
இந்திய கேப்டன் விராத் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இந்த சதத்துடன் ஒரு நாள் அரங்கில் தனது 35 வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இதை அடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.
விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவுடன் திருமணம் முடிந்த கையுடன் விளையாடி அணிக்கு அபார வெற்றி பெற்றுத் தந்துள்ளார் என்பதுடன், அதிக ரன்களும் குவித்துள்ளார்.