மும்பை:
திருமண நிகழ்ச்சிக்காகச் சென்று துபையில் சனிக்கிழமை இரவு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் உடல், செவ்வாய்க்கிழமை இன்று இரவு மும்பை கொண்டு வரப் படுகிறது. அவருக்கான இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாளை பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை வைக்கப்படும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மும்பை செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் க்ளப்பில் அவரது உடல் வைக்கப்படும் என்றும், அதன் பின்னர், மதியம் 2 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் அங்கிருந்து துவங்கி மதியம் 3.30 மணி அளவில் மேற்கு வில்லே பார்லே, பவன் ஹான்ஸ் அருகில் உள்ள இடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்புவதில் இழுபறி நீடித்தது. சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, போலீஸார் மற்றும் நீதித்துறை அரசு வழக்கறிஞர் ஆகியோரின் தீவிர விசாரணைக்குப் பின்னர், விசாரணையில் திருப்தி ஏற்பட்ட நிலையில் இந்த விசாரணையை இத்துடன் முடித்துக் கொள்வதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் ஸ்ரீதேவியின் உடல் துபையில் இருந்து மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.