பெரும் பரபரப்பையும் படபடப்பையும் ஏற்படுத்தி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது .
பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் விரலை உயர்த்தப் போவது யார் என்பது இன்று காலை 10 மணிக்குப் பின் தெரியும். முற்பகல் 11 மணிக்கெல்லாம் டிரெண்டிங் தெரிய ஆரம்பித்துவிடும்.
கர்நாடக சட்டசபைக்கான தேர்தலில் கடந்த 12ஆம் தேதி சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில், ஜெயநகர், ராஜராஜேஷ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப் படது. மற்ற 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜெயநகரில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததாலும், ராஜராஜேஷ்வரி நகரில், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாலும் தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டது.
பாஜக 222 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 221, மஜத 201 அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் 18, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டன.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முற்பகல் 11 மணிக்கு வெற்றி நிலவரம் குறித்து ஓரளவு தெரிந்துவிடும். மாலை 6 மணிக்குள் முழு முடிவும் வெளியாகிவிடும்.
பெங்களூரில் அதிகபட்சமாக 5 மையங்களிலும், அடுத்தபடியாக தும்கூரில் 3 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு மையத்திலும், 20 முதல் 23 டேபிள்கள் போடப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுக்காக நாடே பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.