சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகச் சொல்லி, முதல்வர் பிணரயி விஜயனுக்கு முழு ஆதரவும் கொடுப்பதாக கூறியிருந்த கேரளத்தின் பகவத் கீதை உரைகள் சொற்பொழிவு நிகழ்த்தும் சுவாமி சந்தீப் சைதன்யாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கேரளம், குண்டமன்கடவு பகுதியில் உள்ள ஆசிரமத்தை மர்ம நபர்கள் சிலர் சனிக்கிழமை இரவு தாக்கியுள்ளனர். அங்கே நிறுத்தப் பட்டிருந்த கார்கள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டன.
இதை அடுத்து சந்தீப்பானந்தகிரி ஆசிரமத்தில், போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சந்தீப்பானந்த கிரிக்கும், பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு அவரது ஆசிரமத்துக்கு வந்த மர்ம நபர்கள், கார்களில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அவர்கள் யார் என்பது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கண்டறியப் படும் என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில் கருத்து சொன்னதால் மட்டும் இந்தத் தாக்குதல் நடந்ததா அல்லது, சந்தீப்பானந்தாவுக்கு பழைய எதிரிகள் உள்ளனரா, அவர்கள் மூலம் ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தெல்லாம் விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.
ஆசிரமத்தில் நிறுத்தப் பட்டிருந்த கார்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பட்டுள்ளதாக கைரேகை நிபுணர்கள் கூறியுள்ளதால், ஆசிரமத்துக்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, யாராவது பெட்ரோல் வாங்கிச் செல்கின்றார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு மர்ம நபர்களால் ஆசிரமம் தாக்கப் பட்ட நிலையில், மறு நாள் சந்தீப்பானந்தகிரி ஊடகங்களில் பேசிய போது, இன்னொரு அயோத்தி பிரச்னையைப் போல் சபரிமலை பிரச்னையை சங் பரிவார் அமைப்புகள் கையில் எடுத்திருக்கின்றன என்று தாக்கியிருந்தார்.
முன்னதாக, உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று அளித்த தீர்ப்புக்கு சந்தீப்பானந்த கிரி வரவேற்பு தெரிவித்ததுடன், மரபு மற்றும் நம்பிக்கைகள் என்ற பெயரில் சில மூடத்தனங்கள் மீது தாம் நம்ப வைக்கப் படுவதை கேரள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் சந்தீப்பானந்தகிரி.
ஸ்கூல் ஆஃப் பகவத் கீதா என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி, சொற்பொழிவுகளை நிகழ்த்தி வரும் இவர், முன்னர் சந்தீப் சைதன்யா என்ற பெயரில் அழைக்கப் பட்டார். இவரது சொற்பொழிவுத் தொகுப்பு நூல் தமிழிலும் வெளிவந்திருக்கிறது. பின்னாளில் சீடர்கள் மற்றும் அன்பர்கள் அதிகரிக்கவே, தனது பெயரை சந்தீப்பானந்தகிரி என்று மாற்றிக் கொண்டார். சுவாமி என்று பெயருக்கு முன் போட்டுக் கொண்டு, தாம் ஒரு சன்யாசி என்று காட்டிக் கொண்டிருக்கும் இவர் மீது இப்போது ஹிந்து மத நம்பிக்கை கொண்ட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, ஹிந்து மதத்தின் தெய்வங்களை மட்டும் நிந்தனை செய்யும் கம்யூனிஸ்ட் அரசின் கைப்பாவையாக சந்தீப் மாறிவிட்டது கண்டு பலரும் அவரை வறுத்தெடுக்கிறார்கள். குறிப்பாக இவரது பகவத் கீதை உரைகளைக் கேட்பதற்காகவே வந்த மக்கள் பலரும் இப்போது இவரின் போலித்தனம் கண்டு, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்கிறார்கள்.
நம் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி., பொன் மாணிக்கவேல் கொஞ்சம் கேரளா பக்கம் போகச் சொன்னால் நன்றாக இருக்கும். அங்கே சந்தீபானந்தா ஆசிரமத்தில் இரு கார்கள் தீவைத்துக் கொளுத்தப் பட்ட பின், பல உண்மைகள் வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. ஆசிரமத்துக்குள் ஏகப்பட்ட விக்ரகங்கள் இருப்பதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று கூறுகின்றார்கள்!
இவரது ஆசிரமத்துக்கு வந்து பக்தையாகவே இருந்த ஒரு பெண்மணியின் ஆவேசக் குரல் இது…