ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 1வது ஏவுதளத்திலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் முழுவதும் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டில் பூமியை கண்காணிக்கும் வகையில் விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. இது முழுவதும் இஸ்ரோவின் தயாரிப்பு.
மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகை 30 வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கி.மீ., உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள் 504 கி.மீ., உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது. இதற்கான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று காலை 5.57 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.