ராஜஸ்தான் மாநில பள்ளிப் பாடத்தில் இடம் பெறுகிறார் விமானி அபிநந்தன்.
பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அறிவிப்பில்… அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று சிக்கிக் கொண்டார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறை பிடித்தனர். இந்தியா மேற்கொண்ட தூதரக நடவடிக்கையால், உலக நாடுகளின் நெருக்குதலில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.