வயநாடு : கேரளாவின் வயநாடுவை அடுத்த வைத்திரி பகுதியில் ரிசார்ட் ஒன்றில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
நேற்று இரவு 8 மணிக்கு, உபவன் ரிசார்ட்டிற்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்தவர்களை சிறைப் பிடித்து வைத்தனர். இந்தத் தகவல் அறிந்து ரிசார்ட்டுக்குச் சென்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இன்று அதிகாலை 4.30 வரை துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், இதில் படுகாயம் அடைந்த மாவோயிஸ்டுகள் இருவர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை அந்த இடத்தை சோதனை நடத்தியபோது, மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், காயமடைந்த மாவோயிஸ்டுகள் சிகிச்சை பெறுவதற்காக வர வாய்ப்புள்ளதால் தமிழக – கேரள எல்லையில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.