ஐதராபாத் : வெயில் வறுத்து எடுக்கிறது வீதியில்! கிராம சிங்கங்களாக தெருநாய்களின் அட்டகாசம்.
கண்ணில் பட்டவர்களை எல்லாம் பாய்ந்து குதறுகின்றன. அதிலும் சிறுபிள்ளைகள் தென்பட்டால் தெருநாய்கள் விடுவதில்லை. கிடைத்த இடத்தில் எல்லாம் கடித்து காயப்படுத்தி இழுத்துச் செல்கின்றன .
கை கால் தலை முதுகு எங்கு பார்த்தாலும் நாய்க்கடி பட்டு ரத்தம் சிந்த குழந்தைகள் ஐயோ அம்மா என்று அலறும் காட்சிகள் சர்வசகஜமாக உள்ளன . காயமுற்றவர்களை பெற்றோர் உள்ளூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தூக்கிக் கொண்டு ஓடினாலும் அங்கே வெறி நாய்க்கடிக்கான ஊசிகள் anti rabies injection கைவசம் இல்லாததால் அலறிக்கொண்டே குழந்தைகளை நாராயணகுடா நாய்க்கடி மருத்துவமனைக்கோ காந்தி மருத்துவமனைக்கோ விரைந்து அழைத்துச் செல்லும் நிலைமை காணப்படுகிறது.
மௌலா அலி மலைமீது சிறுவனை கடித்த தெரு நாய்கள்:- மௌலாஅலி மலை மீது கும்பலாகக் கூடியுள்ள தெரு நாய்கள் 6 வயது சிறுவனை தாக்கியதால் தீவிர காயமடைந்து தற்போது காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
ஹஸரத் அலீ நினைவு நாளை முன்னிட்டு ரம்ஜான் மாதத்தில் ஏற்பாடு செய்த பிரார்த்தனையில் சிறுவன் சக்லீனை அழைத்துக்கொண்டு அவன் தாய் மௌலாஅலி மலைக்குச் சென்றுள்ளார். அச்சமயம் ஸக்லீன் மலைமீது சென்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரேயடியாக தெருநாய்கள் சிறுவன் மீது பாய்ந்து உள்ளன.
மாமிச ருசி அறிந்த மலைமேல் அலையும் அந்தத் தெரு நாய்கள் பையனின் கை கால் கழுத்து என்று உடம்பு முழுதும் கடித்து புதருக்குள் இழுத்துச் சென்றன. பையனின் குரல் கேட்டு நாய்களைத் துரத்திவிட்டு பையனை காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
தொடரும் கதை:- மல்காஜகிரி பகுதியில் பல இடங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது. ஓல்டு மௌலாஅலி மலைப் பகுதியில் மாமிசம் விற்கும் கடைகள் அதிகம் இருப்பதால் கடைக்காரர்கள் வீசி எறியும் வீணாகிப்போன மாமிசத் துண்டுகளைத் தின்று பழக்கப்பட்டவைகள் இஷ்டம் போல் திரிந்து வருகின்றன.
கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஜிஎச் எம் சி அதிகாரிகள் நாய்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார்கள்.