கலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஜன.28, செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.
ஈரடியால் உலகை அளந்த திருக்குறளில், ஏழு சீர்களில் வெண்பா வகையில் கருத்துகள் பதியப் பட்டிருக்கும். அதை முன்னிட்டு, ஏழு என்ற எண்ணைக் கையில் எடுத்துக் கொண்ட கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தொடர்ந்து ஏழு மணி நேரம் திருக்குறள் குறித்து விளக்க நிகழ்ச்சிகள் செய்யத் தொடங்கினார்.
முதலில் சென்னையில் தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்னிலையில் 7 மணி நேரம் தொடர்ந்து திருக்குறள் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்களுக்கான 7 மணி நேரம் தொடர்ந்து திருக்குறள் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார்.
தற்போது தாம் படித்த பள்ளியில் பள்ளி மாணவர்களுக்காக 7 வகுப்புகள் தொடர்ந்து திருக்குறள் விளக்கக் கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் இந்த நிகழ்ச்சியினை நடத்தினார். அந்த வகையில் இது தமது மூன்றாவது நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார் கீழாம்பூர்.
முன்னதாக, பள்ளிக்கு வந்திருந்த கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்று, நினைவுப் பரிசளித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தொடர்ந்து, 9,10,11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களிடையே ஏழு வகுப்புகளில் திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் தொடங்கி பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு திருவள்ளுவரின் உள்ளத்தை எடுத்துரைத்தார். திருக்குறள் கருத்துகள் எவ்வாறு நம் வாழ்வில் மேற்கொள்ளத் தக்கவை என்பது குறித்து கூறியது தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று மாணவர்கள் பதிலுரைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழாசிரியர் ஜெயந்தி ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பள்ளியின் சிறப்பு அதிகாரி சுந்தரம் நிறைவு நிகழ்ச்சியில் வாழ்த்துரை நல்கினார். இந்த நிகழ்ச்சியில், கலைமகள் இதழ் பதிப்பாளர் பிடி ராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.