பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இது மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார். இதற்காக #JanJanKaBudget என ஜனங்களுக்கான பட்ஜெட் இது என்ற பொருள்படும் ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவு செய்தார். இதற்காக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பாராட்டுவதாகவும், இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மற்றும் நிதி அமைச்சக ஒட்டுமொத்தக் குழுவையும் பாராட்டுவதாகவும் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பட்ஜெட்! நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கும் பட்ஜெட்.
சுற்றுலாத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட் வழி ஏற்படுத்தியுள்ளது. டிவிடெண்ட் விநியோக வரி நீக்கம் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கை. பட்ஜெட் மூலமாக இளைஞர்களுக்கு அதிக பலன் கிடைக்கும்!
அடிப்படை கட்டமைப்புகள் முதலீடு அதிகரிப்பின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்! திறன் மேம்பாடு திட்டம் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதில் கிடைக்கும்! சுமார் 1 லட்சம் கிராமங்களில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்! மத்திய அரசின் பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு, தேர்வர்களின் சுமையை குறைக்கும்…! என்று கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.