செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது எஸ்.ஆர். எம். பல்கலை ஒரு மர்ம தேசமாக மாறியுள்ளதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப்பைச் சேர்ந்த ஆஷாராணா என்பவர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று இரவு அவர் தங்கியிருந்த விடுதி தனி அறையில் துப்பட்டாவால் கழுத்தில் தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
வெகு நேரமாகியும் விடுதி அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் பேரில் கல்லூரி நிர்வாகம் அறைக் கதவை உடைத்துப் பார்த்தபோது இது தெரியவந்ததாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டது. அவ்வாறு மாணவி இறந்து கிடந்ததாக கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலை அடுத்து, அங்கே சென்ற போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாக எஸ்.ஆர்.எம். பல்கலை விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள், மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும், விடுதிக் கட்டடத்தின் மேலே இருந்து குதித்து உயிரிழப்பதுமான சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. ஆயினும், எந்த விதமான துப்பும் இதுவரை போலீஸாரால் துலக்க முடிவதில்லை!