கல்விப் பணியில் ஃபூலே தம்பதியினரின் பங்கு
கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
ஆசிரியர் தினமான இன்று இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் ஃபூலேயைப் பற்றியும், அவரின் கணவரும், அவரின் முதல் ஆசிரியருமான ஜோதிராவ் ஃபூலே அவர்களின் வழிகாட்டலையும் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜனவரி 3-ம் நாள், 1831-ம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தில் நைகாவ் என்னுமிடத்தில், பிறந்த சாவித்திரிபாய், தனது ஒன்பதாவது வயதில் ஜோதிராவ் ஃபூலேவை மணந்தார். தோட்ட வேலை செய்யும் பிரிவில் பிறந்த ஜோதிராவ் பல புத்தகங்களைப் படித்ததனால், கல்வியின் அருமை, பெருமைகளை அறிந்தவராய் இருந்தார்.
அவரது காலத்தில் கல்வி உயர்ந்த பிரிவினருக்கே உரியது என்று கருதப்பட்டது. மற்ற பிரிவினருக்கு எட்டாக் கனியானது கல்வி. கல்வி அறிவினாலேயே சமுதாயத்தில் சமத்துவம் ஏற்படுத்தப்படும் என்று நம்பினார், ஜோதிராவ் ஃபூலே.
பெண்களுக்கு கல்வி கற்பித்தால் குடும்பமும், சமுதாயமும் உயரும் என்பதை அறிந்தவராய், மதிய வேளையில் தனக்கு சாப்பாடு கொண்டுவந்து கொண்டிருந்த மனைவிக்கு கல்வியறிவை ஊட்ட முயன்றார். ஒரு பெண் ஆசிரியையால் பெண்களுக்கு எளிதாக பாடம் கற்பிக்க முடியும் என்று நம்பினார், அவர்.
ஜோதிராவின் முயற்சியை அறிந்த அவரது தந்தை, பாரம்பரியத்தை மீறிய ஜோதிராவ் தம்பதியரை வீட்டை விட்டு வெளியேற்றினார். சாவித்திரிபாயும் ஜோதிராவுடன் தைரியமாக பின்தொடர்ந்தார். கல்வி வேட்கை அவர் மனதில் ஆழப் பதிந்தது.
ஜோதிராவ் தன் மனைவியை ஒரு பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். அருமையாய் படித்த சாவித்திரிபாய், ஒரு ஆசிரியராய் ஆவதற்கு தன்னை தயார் செய்து கொண்டார்.
விடாமுயற்சியோடும், மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டியும், ஃபூலே தம்பதியர் விஷ்ராம்பாக் வாடா என்னும் இடத்தில் பூனேயில் பெண்களுக்கான ஒரு பள்ளியை 1848- ல் தொடங்கினர்.
முதலில் ஒன்பது பெண்களே சேர்ந்தனர். சாவித்திரிபாய் தன் சக தோழி ஃபாத்திமா ஷேக் மற்றும் தன் கணவரின் உறவினரான சகுணாபாயுடன் இணைந்து அப்பள்ளியை திறம்பட நடத்தினார். அதன் பிறகு 25 மாணவிகள் அவருடைய பள்ளியில் பயின்றனர்.
உயர்சாதி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் சாவித்திரிபாயை எதிர்ப்பதாக நினைத்து பலவித இடைஞ்சல்களையும், தொந்தரவுகளையும் அவர் பள்ளிக்குச் செல்லும்போது செய்து வந்தார்கள்.
அதனை துச்சமாக நினைத்து அவர்களுக்கே தனது பணியினை விளக்கினார் சாவித்திரிபாய். அப்படியும் அவர்களை சமாளிக்க முடியாத சமயத்தில் சாவித்திரிபாய் தன் கல்வி சேவையை விட்டு விட முயன்றபோது, அவருக்கு பக்கபலமாக அவரது கணவரே, அவருக்கு ஊக்கமளித்து, சாவித்திரிபாயின் திறமைக்கு மெருகேற்றி, அவருக்கு மனபலத்தை கொடுத்தார்.
கணவர் கொடுத்த உற்சாகத்தினால் தைரியமடைந்த சாவித்திரிபாய், தன்னை இழிவுப்படுத்திய கூட்டத்திலிருந்த ஒருவரை தன் கையால் அறைந்தார். அடுத்த கணமே, அந்தக் கூட்டமானது ஓடி ஒளிந்தது. அவர்களின் அட்டகாசமும் ஒடுக்கப்பட்டது.
ஃபூலே தம்பதியர் முதல் நான்கு வருடங்களில் 18 பள்ளிகள் பெண்களுக்காக துவக்கினர். 1852- ம் ஆண்டு ஆங்கில அரசு ஃபூலே தம்பதியரை அவர்களின் கல்வி சேவைக்காக கௌரவப்படுத்தியது. பின்னர் அனாதை குழந்தைகளுக்காக 52 பள்ளிகளை உருவாக்கினர்.
இதற்கிடையில் சாவித்திரிபாய் தன் கணவர் ஜோதிராவ் ஃபூலேயின் அகால மரணத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பின்னரும், தளராது, கல்விச் சேவையிலும், சமூகச் சேவையிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்ப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் சாவித்திரிபாய்.
அவர் பல கவிதை புத்தகங்களையும் இயற்றியுள்ளார். ‘காவ்ய ஃபூலே’ என்னும் கவிதை தொகுப்பு இன்றும் மராட்டிய மக்களின் விருப்பமாக உள்ளது. சாவித்திரி பாய், ப்ளேக் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு சேவை செய்து கொண்டிருந்த போது மார்ச் 10- ஆம் தேதி, 1897-ம் ஆண்டு தன் இன்னுயிரை துறந்தார்.
சாவித்திரிபாய் ஃபூலே ஒரு புரட்சிப் பெண்ணாய், முதல் பெண் ஆசிரியையாய், சமூக சேவகியாய், கவிதாயினியாய் மிளிர்ந்தவரையும், அவருக்கு கல்வியறிவு கொடுத்து, ஆணுக்குப் பெண் சமம் என அறிந்து, சமுதாயத்திற்கு எடுத்துரைத்து, மனைவியின் வெற்றிக்கு வழிகோலிட்ட ஜோதிராவ் ஃபூலேயும்
ஆசிரியர் தினத்தன்று நினைவுகூர்வோம்!