நிவர் புயல் சென்னையை தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது
கடந்த இரு நாட்களாக வாட்ஸப் வாயிலாக ஒரு வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையில் தகரம் பறந்து விழுந்து விபத்து ஏற்பட்டது போல் தகவல் பரவியது. ஆனால் அது பாகிஸ்தான் கராச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது.
இருப்பினும் இந்த வீடியோ காட்சியில் உள்ள சம்பவத்தைப் போல் சாலை ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும் பேனர்கள் புயல் காற்றில் கழன்று கீழே விழுந்து விபத்துகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் சென்னை மாநகராட்சி களத்தில் இறங்கியுள்ளது
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நண்பகல் 12 மணிக்குள் பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி நவ.25 இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‛நிவர்’ புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, கரையைக் கடக்கக் கூடும்.
இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இன்று நண்பகல் 12 மணிக்குள் பேனர்கள் மற்றும் பெயர்ப் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதியுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.