மாதம் தோறும், 1,000 ரூபாய் மட்டும் செலுத்தி, விருப்பம் போல் டவுன் பஸ்களில் பயணிக்கலாம் என, அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
அரசு பஸ்களில் பள்ளி மாணவர்கள் பயணிக்க ஏதுவாக, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கல்லுாரி மாணவர்கள் சலுகை கட்டண பாஸ் மூலமும் பயணித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோருக்கு, அரசு பஸ்களில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தினமும் பணிக்கு செல்பவர்கள், பிற பணிகள், வியாபார நோக்கத்திற்காக தினசரி பஸ்களை பயன்படுத்துபவர்களுக்கு, டவுன் பஸ்களில் விருப்பம் போல் பயணிக்கும் சலுகை கட்டண அட்டையும், தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாதம் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் மட்டும் செலுத்தி, சிவப்பு வண்ண பஸ்கள், சாதாரண டவுன் பஸ்களில் பயணிக்கலாம்.
இதற்கான சலுகை கட்டண அட்டை தேவைப்படுபவர்கள், ஆதார் அட்டை நகலுடன், கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், ‘மாதம்தோறும், 1 முதல், 15ம் தேதி வரை உக்கடம் மற்றும் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்களில், நேர காப்பாளர் அலுவலகத்தில் சலுகை கட்டண பாஸ் வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி, ஒரு நாளில் பல முறை, பயன்படுத்தி நகரில் பயணிக்கலாம் என்பதால், பயணிகளிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது’ என்றனர்.