திருவள்ளூரில் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து சாக்கில் கட்டி தூக்கி சென்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வாயலூர் ஊராட்சியில் அடங்கிய ராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி தேவேந்திரசிங் (41) – சாயா (33). கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அங்கு தங்கி கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஓட்டும் தொழில் செய்து வந்தனர்.
அதே பகுதியியை சேர்ந்த மனோஜ் (30) என்ற நபருடன் சாயாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோஜும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் நெருக்கம் அதிகமாக அது கள்ளக்காதலாக உருவாகியுள்ளது.
இதனால் அடிக்கடி தேவேந்திரசிங் வேலைக்கு செல்லும் போதெல்லாம் மனோஜ் சாயா வீட்டிற்கு வந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது புகைப்படங்களும் எடுத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல் தேவேந்திரசிங் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த மனோஜ் சாயாவிடம் உன் கணவனை விட்டு விட்டு என்னுடன் வா என கூறியுள்ளார். இதற்கு சாயா மறுப்பு தெரிவித்ததால் நாம் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை உன் கணவரிடம் காட்டி விடுவேன் என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க எதிர்பாராத விதமாக தேவேந்திரசிங் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனோஜ் அங்கிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த தேவேந்திரசிங் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியுள்ளார். மேலும் சாயாவின் கண் முன்னே சுத்தியலால் மனோஜை அடித்து கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க திட்டமிட்ட கணவன் மனைவி மனோஜின் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி இரவு வரை காத்திருந்தனர். நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையை எடுத்து கொண்டு யாரும் இல்லாத இடத்தில் வீசி விடலாம் என சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் இரவில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் இருசக்கர வாகனத்தை எதார்த்தமாக நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் நிற்காமல் வேகமாக சென்றதால் போலீசார் சந்தேகமடைந்து பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர்.
அப்போது சாக்கு மூட்டையை ஆய்வு செய்ததில் மனோஜ் உடல் ரத்த காயங்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன் மனைவி மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.