மனைவியின் கள்ளகாதலை கண்டித்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (44). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மணிமேகலை என்ற மனைவி உண்டு.
இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் கண்ணன் தன் வீட்டு மாட்டு கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மலைச்சாமி என்ற நபர் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராஜேஷ் கண்ணன் தலையில் போட்டு அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ராஜேஷ் கண்ணன் அலறி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சத்தம் கேட்டு வந்த ராஜேஷ் கண்ணனின் தம்பி கதிரவன், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கதிரவன் கொடுத்தப் புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், மலைச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் கண்ணனின் மனைவி மணிமேகலைக்கும், மலைச்சாமிக்கும் கடந்த 4 வருடங்களாக நெருக்கமான தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த கணவர் ராஜேஷ் கண்ணன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மலைச்சாமி ராஜேஷ் கண்ணனை கொலை செய்துள்ளார். மனைவி மணிமேகலையிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.