Former AIADMK minister Thoppu Venkatachalam expelled from AIADMK party for anti party activities and also for contesting as independent candidate from Perundurai since he was not given ticket.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் படாததால் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் போட்டியிட சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று நீக்கப்பட்டார்.
அதிமுக கூட்டணியில் தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் பல தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களத்தில் சுயேட்சையாக போட்டி இடுகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து, அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்து இன்று நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கை:
”கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள காரணத்தினால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாச்சலம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்,’