மதுரை: இந்திய ரயில்வேயில் ஐந்து மடங்கு ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 2020-21ஆம் ஆண்டில் 6,015 கிலோமீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“இந்திய ரயில்வேயில் 2020-21ஆம் ஆண்டில் 6,015 கிமீ ரயில் பாதை மின்மயமாக்கப் பட்டுள்ளது. முன்பு அதிகபட்சமாக 2018-19ஆம் ஆண்டில் 5,276 கிமீ ரயில் பாதை மின்மயாக்கப் பட்டிருந்தது.
கரோனா ஊரடங்கு காலமான 2020-21ஆம் ஆண்டில் அதிக பட்சமாக 6,015 கிமீ ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் போக்குவரத்துச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்கிறது.
இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 64,689 கிமீ, கொங்கன் ரயில்வே வசமுள்ள 740 கிமீ ரயில் பாதையையும் சேர்த்து 65,429 கி.மீ., ரயில் பாதை இந்தியாவில் உள்ளது. இவற்றில் 2021 மார்ச் 31 வரை 45,881 கிமீ ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரயில்வேயில் ரயில் பாதை மின்மயமாக்கலில் 71 விழுக்காடாகும்.
இது இறக்குமதியாகும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விரைவான போக்குவரத்தை உறுதிசெய்யவும் இந்திய ரயில்வே எடுக்கும் தலையாய முயற்சி ஆகும்.
2007 – 2014 ஆண்டுகளில் ஏழு விழுக்காடான 4,337 கிமீ ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு இருந்தது. 2014 – 2021 ஆண்டுகளில் 37 விழுக்காடான 24,080 கிமீ ரயில் பாதை மின்மயமாக்கப் பட்டுள்ளது. இது கடந்த காலத்தைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம்.34 விழுக்காடு மின்மயமாக்கல் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. 2020 – 21ஆம் ஆண்டில் ரயில் போக்குவரத்திற்கு மின்சாரம் வழங்க 56 துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
முன்பு அதிகபட்சமாக 42 உப மின் நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன. மொத்தமாக 201 உப மின் நிலையங்கள் கடந்த ஏழு ஆண்டுகளில் நிறுவப்பட்டுள்ளன.
அண்மைக் காலங்களில் மின்மயமாக்கப்பட்ட 11 முக்கிய ரயில் பாதை பிரிவுகளில் சென்னை – திருச்சி ரயில் பாதை பிரிவும் அடங்கும். 2023ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும். இந்த முயற்சி நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மிகவும் உதவியாக இருக்கும்… என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.