காட்பாடி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). தந்தை பெயரில் உள்ள பூர்வீக வீட்டை, தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக இவர் பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதாவிடம் (32) மனு அளித்துள்ளார்.
அப்போது, பட்டா மாறுதல் செய்ய அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டுமென கூறி உள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத வெங்கடேசன், இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுளை வெங்கடேசன், கவிதாவிடம் வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கவிதாவை கையும், களவுமாக கைதுசெய்தனர்.
தொடர்ந்து, அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கவிதாவிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்