சத்திரப்பட்டி டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபாட்டில் விற்கப் படுவதாக மதுக்குடியர்கள் புலம்புகின்றனர். மேலும் பெயர்ப் பலகையே இல்லாமல் மதுபானக் கடை இயங்குவதாகவும் கூறுகின்றனர்.
மதுரை மேற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி ஆற்றங்கரை தோட்ட பகுதியில் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் , அரசு டாஸ்மாக் மதுக்கடை என்ற பெயர் பலகையே இல்லை. மேலும், பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் 30 வரை கூடுதல் வசூல் செய்வதாக மதுக்குடியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடையில் உள்ள மதுபாட்டில்கள் போலி எனவும் அந்த பாட்டிலில் பூச்சி கிடந்தாதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன் குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சைக்கு உள்ளானது. பாட்டில் சரியான முறையில் சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இந்த மதுக்கடை உண்மையில் அரசு மதுபானக் கடை தானா, அல்லது தனியார் நடத்தும் கடையா என அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மதுக்குடியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.