ரஸ்க் தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் ரஸ்க்குகளை பாக்கெட்டில் பேக் செய்யும் பொழுது அதை காலால் மிதித்து நாவால் நக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோவில், ஊழியர் தட்டில் வைக்கப்பட்டுள்ள ரஸ்க்குகளை காலால் மிதித்தும், அதை பாக்கெட்டில் அடைக்கும் போது நாவால் நக்கியும் அடைக்கிறார். அந்த ரஸ்க்குகள் மீது அவர் காலை வைத்து அடுக்குகிறார். இதைப் பார்க்கும்போது அவர் இந்த விஷயத்தை வேண்டுமென்றே செய்கிறார் என்பது இந்த வீடியோவில் தெரிகிறது.
இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதையடுத்து நெட்டிசன்கள் ஊழியரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரை சிறையிலடைக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனை அடுத்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ரஸ்க் தயாரிப்பு நிறுவனங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட சுமார் 300 கிலோ ரஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அங்கு பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்களின் கைகளை சுத்தமாக வைத்து பணி செய்யவும், முகக் கவசம் அணியவும், தடுப்பூசி அவசியம் அனைவரும் போட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பின்னர், மற்றொரு ரஸ்க் கம்பெனியில் நடத்திய சோதனையில், அங்கு சுகாதாரமற்ற முறையில் ரஸ்க் தயாரிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக ஊழியர்களை வெளியேற்றி அந்த கம்பெனியை தற்காலிகமாக மூடினர்.
இதேபோல், காரைக்குடியில் உள்ள உணவகங்கள் மற்றும், இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் கெட்டுப்போன 50 கிலோ புரோட்டா மாவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்தனர். மேலும், கோழி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 50 கிலோ இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.