கேரள மாநிலம் இடுக்கி அருகே 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த காமகொடூரனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (22). தேயிலை தோட்ட தொழிலாளி.
அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது பக்கத்து குடியிருப்பில் மற்றொரு தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த தொழிலாளிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்தநிலையில் கடந்த 30ம் தேதி சிறுமி வீட்டில் தூக்கில் இறந்த நிலையில் கிடந்தார். மாலையில் வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து வண்டிப்பெரியார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அர்ஜூன் தான் குழந்தையின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு அர்ஜூன் அவளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
பல மாதங்களாக இந்த கொடூர செயலை செய்து வந்துள்ளான். சம்பவத்தன்று இதே மாதிரி கொடூரமாக பலாத்காரம் செய்தபோது குழந்தை மயங்கி விட்டது.
உடனே இறந்து விட்டதாக கருதிய அர்ஜூன் குழந்தையை தூக்கில் தொங்க விட்டுள்ளான். இதில் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அர்ஜூனை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து இடுக்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.