போலீஸ் போல கையில் தடியை வைத்துக் கொண்டு மாஸ்க் அணியாத சுற்றுலா பயணிகளை 5 வயது சிறுவன் ஒருவன் கண்டிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த போதிலும் முழுமையாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்பதாலும், வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தற்போது நம்மிடையே இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது மாஸ்க் அல்லது முகக்கவசம் அணிவது மட்டுமே.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் முகக்கவசம் அணியாததன் விளைவாக முதல் அலை முடிந்து இரண்டாம் அலையையும் இந்தியா எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து இந்தியாவை கலங்கடித்த இரண்டாவது அலை பரவல் தற்போது தான் கட்டுக்குள் வந்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் சில வாரங்களில் 3வது அலை வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோ ஒன்று, 3வது அலை நிச்சயம் என மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலாவின் பாக்சுனாக் எனும் சுற்றுலா தலத்தின் கடைவீதி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் 5 வயதாகும் சிறுவன் ஒருவன் கையில் தடி ஒன்றை வைத்துக் கொண்டு, முகக்கவசம் அணியாமல் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை முகக்கவசம் அணியுமாறு கடிந்து கொள்கிறான்.
உங்களுடைய மாஸ்க் எங்கே எனக்கேட்கும் அந்த 5 வயது சிறுவன், அதிருப்தியில் தடியால் அவர்களை லேசாக சீண்டுகிறான்.
காலில் செருப்பு கூட அணியாமல் அந்த வழியாக செல்வோரை முகக் கவசம் அணிய வேண்டும் என சிறுவன் வலியுறுத்தும் நிலையில் அந்த வழியில் சென்ற பலரும் முகக்கவசம் அணியாமல் சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் முகக்கவசம் அணியாமல் கூலிங் கிளாஸ் கூட அணிந்து செல்வதை பார்க்கலாம்.
உள்ளூர் இன்ஸ்டா பக்கமான Dharamshalalocal-ல் இந்த சிறுவனின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் இந்த மக்களின் சிரிப்பை பாருங்கள்.. அந்த சிறுவனிடம் அணிய செருப்பு கூட கிடையாது.
யார் இங்கே படித்தவர்கள், யார் படிக்காதவர்கள்? என அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக மாறியிருக்கிறது.
இது குறித்து அச்சிறுவன் கூறுகையில், நான் போலீஸ்காரர்கள் மக்களிடம் முகக்கவசம் அணியாததை தட்டிக்கேட்பதை பார்த்தேன். நிறைய பேர் கொரோனா விதிமுறைகளை மீறுவதால் நானும் அப்படி போலீஸ்காரர்கள் போல செய்ய வேண்டும் என நினைத்தேன். மேலும் வளர்ந்து பெரியவனான பின்பு போலீசாக ஆக ஆசைப்படுகிறேன்’ என்றான்.
இந்த வீடியோவை பார்த்த போலீஸ்காரர்கள், அச்சிறுவனுக்கு தொப்பி ஒன்றையும், ஸ்னாக்ஸ் மற்றும் எனர்ஜி பானம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் சில நெட்டிசன்கள் சிறுவனை தேடி வந்து அவனுக்கும், அவனது சகோதரர்களுக்கும் செருப்புகளையும், ஆடைகளையும் வாங்கித் தந்துள்ளனர்.
பலூன் விற்பனை செய்து தனது பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து வரும் சிறுவனின் கல்விக்காக உதவவும் தன்னார்வலர்கள் சிலர் முன்வந்துள்ளனர்.
தில்லியில் தற்போது அதிகமான வெப்பநிலை பதிவாகி வருவதால் அதிலிருந்து தப்பிக்க பலரும் ஹிமாச்சலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஆனால் அவர்கள் இது போல கொரோனா விதிமுறைகளை மீறிவருவது கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.