இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி – முதல் நாள்
– கே.வி. பாலசுப்பிரமணியன் –
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் தலா மூன்று பகலிரவுப் போட்டிகளில் ஆடியுள்ளன. இரண்டு அணிகளும் வெற்றியும் பெற்றுள்ளன, தோல்வியும் அடைந்துள்ளன. இலங்கை அணியில் லகிரு குமாரா காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆடவில்லை. பத்தும் நிசாங்காவும் ஆடவில்லை. இந்திய அணியில் ஜெயந்த் யாதவ்விற்குப் பதிலாக அக்சர் படேல் ஆடினார். இரண்டாவது ஓவரில், ஒரு நோ பாலில் மயாங்க் அகர்வால் இல்லாத ரன்னுக்காக ஓடி ரன் அவுட் ஆனார். பத்தாவது ஓவரில் ரோகித் ஷர்மா 15 ரன் எடுத்து அவுட்டானார். அதன் பின்னர் ஹனுமன் விஹாரி மற்றும் விராட் கோலி இருவரும் சற்று அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருப்பினும் விஹாரி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேற பின்னர் கோலி 23 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இப்படி மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் அனைத்து வீரர்களுடனும் தனது பங்களிப்பை சிறப்பாக அமைத்து இறுதிவரை களத்தில் நின்று கடைசி ஆளாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
இன்றைய போட்டியில் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி நபராக ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் அய்யர் 98 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி 4 சிக்சர்கள் என 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து இலங்கை அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. அவர்களின் மூன்றாவது ஓவர் முதல் பந்தில் குசல் மெண்டிஸ், பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
பும்ராவின் அடுத்த ஓவர் முதல் பந்தில் லஹிரு திருமனே ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரில் திமுத் கருணரத்னே ஷமி பந்தில் அவுட்டானார். இவர் இலங்கையின் முந்தைய பகலிரவு ஆட்டத்தில் 196 ரன் எடுத்தவர். அவர் ஆட்டமிழந்தபோது இலங்கை மூன்று விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்திருந்தது. 12ஆவது ஓவரில் தனஞ்சய சில்வா ஆட்டமிழந்தார். சரித் அசலங்கா அடுத்து 18ஆவது ஓவரில் அவுட்டானார். ஆஞ்சலோ மாத்யூஸ் மட்டும் நின்று ஆடிக்கொண்டிருந்தார். அவரும் 29ஆவது ஓவரில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆட்ட முடிவில் இலங்கை அணி 30 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 86 ரன் எடுத்துள்ளது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இது 166 ரன்கள் குறைவாகும். இந்திய அணி 59 ஓவர்கள் விளையாடியது; 252 ரன்; 4.25 ரன்ரேட். இலங்கை அணி 30 ஓவர்கள் விளையாடி 86 ரன் எடுத்துள்ளது; ரன்ரேட் 2.86. கிட்டதட்ட ஒருநாள் போட்டிபோல போய்க்கொண்டிருக்கிறது.
இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு கட்டத்தில் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் நிச்சயம் எப்படியாவது சதம் விளாசி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 92 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அதிர்ஷ்டம் இன்றி ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விசித்திரமான ஒரு பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
அதாவது இந்திய பேட்ஸ்மேன்கள் 90 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்திருந்தபோது ஸ்டம்பிங் ஆகி அவுட் ஆனவர்களின் பட்டியலில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 ரன்களுக்கு மேல் ஸ்டம்பிங் ஆனவர்களின் பட்டியல்
1987 ஆம் ஆண்டு – வெங்சர்க்கார் 96 ரன்கள்
2001 ஆம் ஆண்டு – சச்சின் டெண்டுல்கர் 90 ரன்கள்
2010 ஆம் ஆண்டு – விரேந்திர சேவாக் 99 ரன்கள்
2022 ஆம் ஆண்டு – ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள்