நெல்லை: தாமிரபரணி மகாபுஷ்கரம் இப்போது சூடுபிடித்துள்ளது. சாதாரணமாக வரும் ஆன்மிக நிகழ்வு என்றால் பெரிதாக செய்திகளில் இடம்பெறாது. ஆனால், புஷ்கரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ, கிறிஸ்துவ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையால் ஊடக வெளிச்சம் படர்ந்தது புஷ்கரத்துக்கு!
அடுத்த பரபரப்பு கிளப்பி, மேலும் சூடுபிடித்துள்ளது புஷ்கரம். இதற்குக் காரணமாக அமைந்தவர் கலெக்டர் பெயரில் சுற்றறிக்கை அனுப்பிய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி!
இதை அடுத்து விளக்கம் கொடுத்துள்ளனர் அறநிலையத்துறை அதிகாரிகள். நீர்ச் சுழல் இருக்கும், நெல்லை மாநகராட்சி எல்லையில் வரும் இரு படித்துறைகளான குறுக்குத்துறை, சிஎன் கிராமம் தைப்பூச மண்டபம் இரண்டு நீங்கலாக மற்ற படித்துறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆட்சியர் கூறியுள்ளதாக விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.
அடுத்தது, ஆகம விதிகளின் படி, தீர்த்தக் கட்டங்களுக்கு ஆலயங்களின் சுவாமி விக்ரகங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று சுற்றறிக்கையில் பரஞ்சோதி குறிப்பிட்டுள்ளார். இது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூர்த்தி தலம் தீர்த்தம்… இவை மூன்றும் ஆன்மிகத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. மூன்றும் இருந்தால்தான் வழிபாடு நிறைவுபெறும்.
தற்போது தீர்த்தக் கட்டமான தாமிரபரணியில் புஷ்கர விழா வருகிறது. அதற்கு தலத்தின் முக்கிய சுவாமியான மூர்த்தி எழுந்தருளக் கூடாது என்று தடைவிதிக்க அறநிலையத்துறை இணை ஆணையர் யார் என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.
தீர்த்தக் கட்டத்துக்கு சுவாமி விக்ரஹங்களை எழுந்தருளச் செய்யக் கூடாது; ஆகமத்தில் இடமில்லை; ஆகம விரோதம் என்றெல்லாம் கூறியுள்ள பரஞ்சோதி, கடந்த 3 வருடங்களுக்கு முன் 2015ல் சென்னையில் நடைபெற்ற பொருட்காட்சித் திடலுக்கு சுவாமி விக்ரகங்களைக் கொண்டு போகச் சொல்லி, அந்த அந்தப் பகுதி உதவி ஆணையர்களுக்கும் செயல் அலுவலர்களுக்கும் கையெழுத்திட்டு அனுப்பிய சுற்றறிக்கையை வெளியிட்டு, இது எந்த ஆகமத்தில் வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொருள்காட்சிக்கு ஒரு காட்சிப் பொருளாக கோயில் விக்ரகங்களை அனுப்பி, கலெக்சன் பார்த்த இணை ஆணையர், ஓர் ஆன்மிக நிகழ்வான தீர்த்தவாரிக்கும் சடங்குகளுக்கும் படித்துறைகளுக்கு சுவாமி விக்ரகங்கள் செல்வது ஆகம விரோதம் என்று சொல்கிறார் என்றால், அவர் மனத்தில் எவ்வளவு வஞ்சம் புரையோடிப் போயுள்ளது என்று குமுறுகின்றனர் நெல்லை வாழ் அன்பர்கள்.
பரஞ்சோதி உண்மையில் அறநிலையத்துறையில் இருப்பதற்கு லாயக்கற்றவர் என்பது மட்டுமல்ல, அவர் உடனடியாக இந்தக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மாற்றல் வாங்கிச் சென்றுவிட வேண்டும் அல்லது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.
2015-பிப்.12ம் தேதி நமது தினசரியில் வெளியிட்ட செய்தி…: பொருட்காட்சி வளாகத்தில் உத்ஸவர் புறப்பாடு நடத்தலாமா?