செங்கோட்டை: அறநிலையத்துறை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டியின் பரிந்துரைப் படி, கோயில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க அதிமுக., அரசு முன்வரவேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தென்காசி சட்டமன்றத்துக்கான பாஜக., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பயிற்சிக் கூட்டம் குற்றாலத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச வந்திருந்த ஹெச்.ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், எங்கெல்லாம் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது, வன்மையாகக் கண்டிக்கத்தக்க விஷயக்ம்.
விநாயகர் சதுர்த்தியின் போது, செங்கோட்டை, திருமயம், வந்தவாசி என எங்கெல்லாம் ஹிந்துக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கிறார்களோ அங்கெல்லாம், ஹிந்துக்களின் வழிபாடுகளை சிதைகும் விதத்தில் வேற்று மதத்தினர் தாக்குதல் தொடுக்கின்றனர் என்றார்.
மேலும் அவர் பேசியது… செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்லெறிந்து கலவரத்தில் ஈடுபட்டது முஸ்லிம்கள். ஆனால் இந்துக்கள் பலரே குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர். வெளியில் வர முடியாத நிலை உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வெளியே வந்துவிட்டார்கள்.
குற்றாலத்தில் தெப்பக்குளத்தில், முஸ்லிம் பள்ளிவாசலின் கழிவுகள் உள்ளே வருகின்றன. இது குறித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
திருக்கோயில் கட்டிடங்களை லீஸுக்கு விட்டிருப்பது உள் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ஹிந்து அமைப்புகள் சார்பில் புகார் செய்யப் பட்டிருக்கிறது. இப்படி ஆலய சொத்துகளை, வீடுகளை உள்வாடகைக்கு விடுதல் சட்ட விரோதம். 12.2.2018 உயர் நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. எனவே உள்வாடகைக்கு எடுத்தல் சட்ட விரோதம். ஆலய நிர்வாகம் உள்வாடகைக்கு விடுதலில் இருந்து திரும்பப் பெறவேண்டும்.
தமிழகத்தில் எந்த ஹிந்துப் பண்டிகையாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும், தலைமை தாங்குவது திமுக.,வுக்கு வழக்கமாகி விட்டது. ஏற்கெனவே பார்த்தோம். ராமராஜ்ய ரத யாத்திரை நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.,வான மனித நேய மக்கள் கட்சியின் தமிமுன் அன்சாரி சட்டமன்றத்துக்குள்ளேயே பெரும் ஆட்டம் போட்டார். மறு நாள் ஸ்டாலின் சட்டமன்றத்தில் சத்யாகிரகம் செய்கிறார். ராமராஜ்ய ரத யாத்திரை செய்தால் என்ன வந்தது?
எந்த இந்து அமைப்புகளாவது, வேளாங்கன்னி ரத யாத்திரைக்கோ, இஸ்லாமியரின் சந்தனக் கூடு உருசு என்று ஊர்லவம் செல்வதற்கோ எதிர்ப்பு தெரிவித்திருக் கிறார்களா? ஆனால் இந்து விரோத திமுக., மட்டுமே தொடர்ந்து இந்துப் பண்டிகைகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று திமுக., மதிமுக., கம்யூனிஸ்ட்கள், மனித நேய மக்கள் கட்சி என்று பலரும் ஆட்சியரிடம் சென்று தாமிரபரணி புஷ்கரம் நடத்தக் கூடாது என்று மனு கொடுத்தார்கள். தயவு செய்து, இந்தக் கட்சிகளில் இருக்கும் குறிப்பாக திமுக.,வில் இருக்கும் ஹிந்துக்கள் கட்சியில் இருந்து வெளியில் வாருங்கள். நம்மை அவமானப் படுத்துகின்ற, ஹிந்து மதத்தைக் கேவலப் படுத்தும் கட்சியாக திமுக., இருந்து வருகிறது.
தாமிரபரணி புஷ்கரம் வழிவழியாக நடந்துவருவதுதான். சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது! வடக்கே கும்பமேளா நடக்கிறது. அதை அரசே நடத்துகிறது. நதிகளை கொண்டாடுவதும், சுத்தப் படுத்தி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும் தான் புஷ்கரத்தின் நோக்கம். ஆனால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் இதற்கு எதிராக செயல்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
எனவே தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று தென்னக ரயில்வே மேலாளர் சொல்லியிருக்கிறார். அதுபோல் மாநில அரசும் சுறுசுறுப்பாக செயல்படவேண்டும். நாட்கள் குறைவாகவே உள்ளன. பணிகளை அரசு முடுக்கி விட வேண்டும்.
மேலும் இந்து சமய அறநிலைய இணை ஆணையர் பரஞ்சோதி தீர்த்தவாரிக்கு சுவாமி விக்ரகங்களை கொண்டு வருவது ஆகம விரோதம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவரே 2015ல் சென்னை கடற்கரை தீவுத்திடலில் நடைபெற்ற அரசு கண்காட்சிக்கு அங்குள்ள புகழ்பெற்ற 28 கோயில்களில் இருந்து உற்ஸவ விக்ரஹங்களை எடுத்து வருவாறு உத்தரவு இட்டிருக்கீறார், அதுவும் ஆனையாக! தெய்வச் சிலைகளை காட்சிப் பொருளாகக் கருதுவது மிகத் தவறு. அது ஆகம விரோதமிலலியா?! ஆனால் புஷ்கரத்துக்கு தீர்த்தவாரிக்கு உத்ஸவரைக் கொண்டு வருவது ஆகமத்தில் விதிக்கப் பட்டதுதான்! தீர்த்தவாரியே அதற்குத்தானே! எனவே பரஞ்சோதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து அறநிலையத்துறை இந்து மரபுகளை நம்பிக்கையை அழிக்கும் துறையாகசெயல்படுகிறது என்பதற்கு பரஞ்சோதியே உதாரணம். 2015ல் பரஞ்சோதி செய்த சட்ட விரோத செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது கோயில் தரிசனக் கட்டணத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நீதிபதிகள் அவர்களின் ஆய்வறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட இந்த ஆய்வறிக்கையில் சொல்லியிருப்பதைத்தான் தொடர்ந்து நாங்களும் சொல்லி வருகிறோம்.
தமிழகத்தில் இருப்பது போல் கோயில்கள் கிடையாது, சொத்துகளும் கிடையாது. இன்று மட்டும் எம்,.ஜி.ஆர்., இருப்பாரே ஆனால், எங்கள் கோரிக்கைகளை செவிசாய்த்திருப்பார். 1985ல் அவர் ஹிந்து ஆலயங்கள் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கமிட்டி போட்டார். குன்றக்குடி அடிகளார் தலைமையில் போட்ட அந்தக் கமிட்டி கொடுத்த அறிக்கையில் உள்ள பரிந்துரை என்னவென்றால், ஹிந்து ஆலயங்கள் ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப் பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர்.க்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், இந்த பரிந்துரையின் அடிப்படையில் இது உடனே அமல் படுத்தப் படவில்லை. அது இன்றளவும் கிடப்பில் போடப்படுள்ளது. அப்போதே எடுக்கப் பட்ட முடிவு. ஆனால் இந்த அரசு, அதை செய்ய முன்வர வேண்டும். அது செயல் படுத்தப் பட்டால், இந்த அளவுக்கான ஹிந்து விரோத நடவடிக்கைகள், சீரழிவு நடக்காது.
ஒரு பெரும்பான்மை சமுதாயத்தின் வழிபாட்டு உரிமைகளை மறுக்கின்ற இந்த செயல் கண்டிக்கத் தக்கது. செக்சன் 92 ஹிந்து அறநிலையத் துறை ஊழியர்கள் . அவர்களுக்கு தொகுப்பு நிதியில் இருந்துதான் சம்பளம் கொடுக்கவேண்டும்… அதில் 18 சதவீதம்தான் கோயில் நிதியில் இருந்து சம்பளத்துக்கான நிதி கொடுக்கப் பட வேண்டும். மேலும் வருகின்ற உபரி வருமானம், வருமானமில்லாத கோயில்களுக்கு பகிரப் பட வேண்டும் என்று சட்ட விதி உள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை ஏதாவது ஒரு கோயில் கட்டியிருக்கிறதா? ஆனால் 8 ஆயிரம் கோயில்களை பாழாக்கியிருக்கிறது. இதைக் கேட்டால், ஹெச்.ராஜா, பொன்மாணிக்கவேலுவுக்கு எதிராக போராட்டம் உண்ணாவிரதம் என்று வருபவர்கள் யார் என்று பார்த்தால், தி.மு.க., திக., கம்யூனிஸ்ட்கள் விடுதலைச் சிறுத்தைகள் என்று… இவர்கள் எல்லாம் ஹிந்து பக்தர்கள்.
இன்னும், ஹிந்து சமய அறநிலையத்துறை பெயரில் இருந்து ஹிந்து மதத்தையே எடுத்துவிட்டார்கள். அதனால், ஹிந்து மதத்துக்கும் இந்த அறநிலையத்துறைகும் சம்பந்தமே இல்லை என்று அவர்களே சொல்லிவிட்டார்கள். எனவே, எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அந்த கமிட்டி அறிக்கை செயல்படுத்தப் படவேண்டும். இந்து ஆலயங்கள் தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட வேண்டும். … என்று பேசினார்.